தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது கொலை மிரட்டல் புகார்!!!

Thursday, March 22, 2012
சினிமா சண்டை பயிற்சியாளரான, ஜாக்குவார் தங்கம் (52) தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜாக்குவார் தங்கம் கூறியுள்ளார்.

கடந்த திங்கள் அன்று தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டம் தியாகராய நகரில் நடந்தது. அதில், அண்டை மாநிலங்களில் இருப்பது போல தமிழ்நாடு திரைப்படத் துறைக்கும் தனியாக தொழிலாளர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தீர்மானத்தை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அப்போது, பேசிய ஜாக்குவார் தங்கம், ’நான் இந்தியா என்ற படத்தை தயாரிக்கிறேன். கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பையும் நிறுத்தி விட்டீர்கள். ஆனால், சிலர் தயாரிக்கும் படத்தின் சூட்டிங் மட்டும் நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் சூட்டிங்கை மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை’ என்று கேட்டுள்ளார்.

எதிர்த்து கேள்வி கேட்டதால் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் தேனப்பன் ஆகியோர் என்னை பார்த்து கேவலமாக திட்டினர். மேலும் துப்பாக்கி படத்தை பற்றி பேசினால், நாங்கள் துப்பாகியால்தான் பேசுவோம் எனக் கூறி மிரட்டி அடிக்க பாய்ந்தனர். கலைப்புலி சேகரன், ராதாகிருஷ்ணன், சுப்பையா, ராகவா, பாலாஜி ஆகியோர் என்னை காப்பாற்றினர். எஸ்.ஏ. சந்திரசேகரன் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அதைத் தொடர்ந்து, மர்ம போன் மிரட்டல்கள் வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஜாக்குவார் தங்கம் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.

இதுகுறித்து, உரிய விசாரணை நடத்துமாறு தி.நகர் துணை கமிஷனர் அசோக் குமாருக்கு, கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்பதாலேயே தீர்மானம் பற்றி எஸ்.ஏ.சி வெளிப்படையாக அறிவிக்கவில்லை என தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Comments