"கர்ணனுக்கு' போட்டியாய் களமிறங்கிய "குடியிருந்தகோவில்' : ஓயவில்லை யுத்தம்!!!

Tuesday, March 20, 2012
சிவாஜியின், "கர்ணன்' படத்திற்கு போட்டியாக, "குடியிருந்த கோவில்' படத்தை மறு வெளியீடு செய்ய வைத்து, சென்னையில் நேற்று திருவிழா கொண்டாடினர் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள்.

தமிழக திரையுலகில் அசைக்க முடியாத மன்னர்களாய் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் வாழ்ந்து மறைந்தவர்கள். இவர்களுக்கு மாற்று இல்லை என்கிற அளவுக்கு, திரையுலக வரலாற்றில் வசூல் சாதனை படைத்ததோடு, தமிழக ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்தவர்கள் இந்த இருவர்.இவர்களின் மறைவிற்கு முன்பும், பின்பும் எத்தனையோ நடிகர்கள் அறிமுகமாகி, குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றாலும், இவர்களின் சாதனையை முறியடிக்க முடியவில்லை; உயரத்தை தொடவில்லை. தமிழக திரையரங்குகள் பலவற்றை இப்போதும், எம்.ஜி.ஆரும், சிவாஜியும் அலங்கரித்த வண்ணம் இருக்கின்றனர்.

இன்றும் வசூல் மன்னர்கள்:நல்ல பழக்கங்களை மட்டுமே கொண்ட கதாநாயகனாக திரையில் வாழ்ந்த எம்.ஜி.ஆரும், பல சரித்திர புருஷர்களை, தேசத் தலைவர்களை நம் கண் முன் நிறுத்திய சிவாஜியும் இன்றும் வசூல் மன்னர்களாகவே தொடர்கின்றனர். அர்த்தமில்லாத இன்றைய திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்து வெறுத்துப்போன, சினிமா ரசிகர்கள், இவர்களின் படங்களை இன்றும் ஆராதித்து வருகின்றனர்.அதன் எதிரொலியாக, இவர்கள் நடித்து, "ஹிட்' அடித்த படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், 1960ம் ஆண்டு வெளியான சிவாஜி நடித்த, "கர்ணன்' திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 16ம்தேதி வெளியானது.சென்னையில் பிரபல திரையரங்குகளான சத்யம், அபிராபி உள்ளிட்டவற்றிலும் திரையிடப்பட்டு, "ஹவுஸ்புல்' காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறான் கர்ணன். ஏற்கனவே, "உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன்' போன்ற படங்களை மறு வெளியீடு செய்த, "திவ்யா பிலிம்ஸ்' நிறுவனத்தினரே கர்ணனையும் மறு வெளியீடு செய்துள்ளனர்.

ஓயவில்லை யுத்தம்: தமிழ் திரையுலகின் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்., - சிவாஜியின் ரசிகர்களுக்குள் அப்போது இருந்த ஆர்வம், போட்டி இப்போதும் குறையவில்லை. சிவாஜியின், "கர்ணன்' படத்திற்கு கிடைத்த வரவேற்பும், செய்யப்பட்ட விளம்பரங்களும் எம்.ஜிஆர்., ரசிகர்களை சூடேற்ற, உடனே சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா இணைந்து நடித்த, "குடியிருந்த கோவில்' திரைப்படத்தை திரையிடவைத்து, திருவிழா கொண்டாடினர்.படம் திரையிடப்பட்ட நேற்று மாலை, தியேட்டர் வளாகம் முழுக்க எம்.ஜி.ஆர்., பக்தர்களின் பேனர்களும், கட்-அவுட்களுமாக நிரம்பி வழிந்தன. புதிய ரிலீஸ் படம் போல் உற்சாகம் பொங்க, தியேட்டரில் குவிந்த ரசிகர்கள், எம்.ஜி.ஆரின் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

பால், பழம், பன்னீர் என்று விதவிதமான அபிஷேகங்கள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் ரசிர்கர்களும், ரசிகைகளும் குத்தாட்டம் போட்டு குஷியாகினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க.,வில் எந்த பொறுப்பும் இல்லாத, எம்.ஜி.ஆரின் பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் இந்த கொண்டாட்ட விவகாரம் சிவாஜி ரசிகர்களுக்கும் கசிய, அவர்களும் நேற்று மாலை சிவாஜியின் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் நடத்தியது ஹைலைட்.

Comments