ரூ.9 கோடி மோசடி புகார்: கடனுக்காக வீட்டை விற்கவில்லை- விஷால் மறுப்பு!

Monday, March 19, 2012
விஷால் நடித்த சத்யம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களை அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். இந்த படங்கள் எதிர்பார்த்த வசூல் ஈட்டாததால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக விஷால் கடனில் சிரமப்படுவதாக செய்திகள் வெளியாயின.

விஷால் மீது நடிகை ராதிகா நடிகர் சங்கத்தில் மோசடி புகார் அளித்தார். தனக்கு ரூ.9 கோடி தர வேண்டும் என்றும் பணத்தை தராமல் இழுத்தடிக்கிறார் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து விஷால் அண்ணாநகரில் உள்ள தனது வீட்டை விற்று கடனை தீர்த்ததாக கூறப்பட்டது. இது குறித்து விஷாலிடம் கேட்ட போது மறுத்தார். அவர் கூறியதாவது:-

என் பெயரில் உள்ள வீட்டை விற்று கடனை தீர்த்ததாக வெளியான செய்தி வதந்திதான். சென்னையிலோ ஐதராபாத்திலோ எனது பெயரில் சொத்துக்கள் எதுவும் இல்லை. நான் எப்படி விற்க முடியும். சொத்துக்கள் வாங்குவது விற்பது சகஜம்தான். கடன் பிரச்சினையோடு அதை சம்பந்தப்படுத்துவது வருத்தம் அளிக்கிறது.

ராதிகாவுக்கு பணம் கொடுக்க வேண்டியது என்பது அவருக்கும் எனது அண்ணனுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஆகும். அதில் தேவை இல்லாமல் என்னை இழுத்து விட்டனர். அந்த பிரச்சினை தற்போது முடிந்து விட்டது.

இவ்வாறு விஷால் கூறினார்.

Comments