உலக காதல் காவியம் டைட்டானிக் 3 டி இப்போது தமிழில்!!!

Thursday, March, 29,2012
உலகக் காதலர்களின் காவியம் என்று போற்றப்படும் டைட்டானிக்கை இப்போது 3 டியில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

1912ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி டைட்டானிக் என்ற பிரம்மாண்ட கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இதில் பயணம் செய்த 2,223 பயணிகளில் 1,517 பேர் உயிரிழந்தனர். இந்த வரலாற்று சோகத்தை மையப்படுத்தி, அதில் ஒரு அற்புதமான காதல் கதையை உருவாக்கி டைட்டானிக் என்ற பெயரில் படம் இயக்கினார் ஜேம்ஸ் கேமரூன். 11 ஆஸ்கர் விருதுகளை வாங்கி குவித்தது டைட்டானிக்.

லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் நடிப்பில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் செய்த வசூல் சாதனை உலக சினிமாவை அதிரவைத்தது. குறிப்பாக இந்தியாவில் வெளியான வேறெந்த ஒரிஜினல் படத்தையும் விட பெரும் வசூலைக் குவித்தது இந்தப் படம்.

இந்நிலையில் வருகிற ஏப்ரல் 15, 2012-அன்று டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் 100-ம் ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூறும் வகையில் டைட்டானிக் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். அதுவும் 2-டி மற்றும் 3-டி தொழில்நுட்பங்களில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

வருகிற ஏப்ரல் 5-ம் தேதி முதல் உலகமெங்கும் ரிலீசாகிறது 3 டி டைட்டானிக். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.

முன்பை விட வண்ணமயமாக, அனைத்தும் நம் கண்முன்னே நடப்பது போன்ற தத்ரூப தொழில்நுட்பத்தில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் ஜேம்ஸ் கேமரூன். அவதார் 3டியை ஒரு முறை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்தப் படத்தைப் போலவே இதிலும் காட்சிகள் அப்படியே கைக்கெட்டும் தூரத்தில் நடப்பது போலத் தெரியுமாம்.

அந்த லியனார்டோ - வின்ஸ்லெட்டின் நீண்ட நேர ரொமான்ஸ் காட்சி... அதுவும் 3 டி எஃபெக்டில்...

இதை நினைத்துதான் நாயகி கேத் வின்ஸ்லெட்டும் பயப்படுகிறாராம். லண்டனில் நடந்த இந்த 3 டி சிறப்புக் காட்சிக்கு வந்திருந்த அவர், "அய்யோ அந்தக் காட்சி 3 டியிலா... எனக்கு ரொம்ப கூச்சமாகவும் பயமாகவும் இருக்கிறது. கண்டிப்பாக இந்த காட்சியை மட்டும் நான் பார்க்க மாட்டேன்.

ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அற்புதமான படைப்பை எனது இரு குழந்தைகளுடன் பார்ப்பது மிகுந்த சந்தோஷமாக உள்ளது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்," என்றார்.

Comments