21 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி பாடிய பாட்டு - ஏ ஆர் ரஹ்மான் பதிவு செய்தார்!!!

Friday, March 16, 2012
21 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் பின்னணி பாடினார். இந்த முறை கோச்சடையான் படத்துக்காக அவர் பாடினார்.

1991-ம் ஆண்டு மன்னன் படத்தில் அடிக்குது குளிரு... என்ற பாடலை எஸ் ஜானகியுடன் இணைந்து பாடினார் ரஜினி. அந்தப் பாடலுக்கு இசை இளையராஜா.

இத்தனை ஆண்டுகளில் பல முறை அவரை பாடுமாறு பல இசையமைப்பாளர்கள் வற்புறுத்தியும் சம்மதிக்காமல் இருந்தார் ரஜினி. இப்போது மீண்டும் ரஜினி தனது அடுத்த படமான கோச்சடையானுக்காகப் பாடியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடந்த இந்தப் பாடல் பதிவின்போது இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சௌந்தர்யா ஆகியோர் உடனிருந்தனர்.

மிக மகிழ்ச்சியுடன் இந்தப் பாடலை அவர் பாடிக் கொடுத்ததாக இசையமைப்பாளர் ரஹ்மான் தெரிவித்தார்...

கோச்சடையான் பல வகையிலும் சிறப்பான படமாக வரவேண்டும் என்பதற்காக இந்தப் படத்தில் ரஜினியை பாடச் சொல்லி ரஹ்மான் மற்றும் சௌந்தர்யா குழுவினர் கேட்க, அவரும் உற்சாகமாக ஒப்புக் கொண்டாராம்.

வெறும் அனிமேஷனா…

இந்தப் படம் வெறும் அனிமேஷன்தானா… ஆயிரம்தான் தொழில்நுட்ப திறமை காட்டினாலும், ரஜினியை இத்தனை நாட்களாகப் படங்களில் பார்த்த மாதிரி அனுபவம் கிடைக்குமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவர்களுக்காக…

ரஜினியின் முத்து படத்தை எப்படி ரசித்தீர்களோ… படையப்பாவை எப்படி ரசித்தீர்களோ, அந்த அனுபவத்தை தரவே நாங்கள் முழு முயற்சி எடுத்து வருகிறோம். நீங்கள் திரையில் பார்க்கப் போவது வெறும் அனிமேஷன் அல்ல. நிஜ ரஜினிதான். அத்தனை காட்சிகளையும் அவர்தான் செய்யப் போகிறார். அவதார் பார்த்தபோது, ஹ்யூமனாய்ட், ஹ்யூமன் வித்தியாசம் எப்படி தெரியாமல் போனதோ, அப்படியொரு உணர்வு இந்தப் படத்தில் கிடைக்கும்”, என்கிறார் படத்தின் கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் மேற்பார்வைக்குப் பொறுப்பாளரான கே எஸ் ரவிக்குமார்.

அது போதுங்க!

Comments