12 இடம் வேண்டாம் என்றுவிட்டு 1 இடத்திற்காக அலைகிறார் வைகோ : நடிகர் செந்தில் தாக்கு!

Monday, March 05, 2012
சென்னை::சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை குயிலி, நகைச்சுவை நடிகர் செந்தில் ஆகியோர் நேற்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.

சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்விக்கு ஆதரவு கேட்டு இளையரசனேந்தல் பிர்கா பகுதியில் தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவருடன் சினிமா நடிகர்கள் செந்தில், ஜெய சூரியகாந்த், நடிகை குயிலி, சினிமா படத்தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், டைரக்டர் லியாகத் அலிகான் ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கிராமங்களுக்கு மினி லோடு ஆட்டோவில் வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் ஓட்டுகள் சேகரித்தனர்.

பிரச்சாரத்தின் போது நடிகர் செந்தில், ’’தி.மு.க. ஆட்சி செய்தபோது மக்களை பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்களாகிய நீங்கள் தான் குடும்பம். எப்போதும் உங்களுக்கு நன்மைகள் செய்யும் நோக்கத்துடன் இருப்பார்.

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது.

அப்போது மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக் கப்பட்டது. அதன்பிறகு வந்த தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டினால் தான் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள மின்வெட்டு பிரச்சினையை முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் தீர்த்து வைப்பார்.

தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை உள்பட அனைத்து துறைகளிலும் கடனாக்கி சென்று விட்டனர். டெல்லியில் சோனியா காந்தியைத்தான் நம்பி தி.மு.க இருக்கிறது.

தமிழகத்தில் குஷ்புவை நம்பித்தான் தி.மு.க. உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வைகோவுக்கு 12 இடங்கள் கொடுப்பதாக ஜெயலலிதா கூறினார். ஆனால் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

தற்போது ஒரு இடத்துக்காக வெளியே அலைந்து கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்வியை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். அவர் கிராமத்தில் உள்ள குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பார்’’ என்று பேசினார்.

Comments