சம்பள உயர்வு கேட்டு பெப்சி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்: படப்பிடிப்புகள் முடங்கியது!

தமிழ், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் சினிமா தொழிலாளர் சங்கமான பெப்சிக்கும் இடையே சம்பள உயர்வு பிரச்சினையில் மோதல் ஏற்பட்டுள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் புதிய ஊதிய உயர்வு நிர்ணயித்து உள்ளனர். இந்த ஊதிய உயர்வை ஏற்க தயாரிப்பாளர்கள் மறுத்து விட்டார்கள்.

பெப்சி தொழிற்சங்கத்துடன் உறவு முறிந்தது என்றும் தன்னிச்சையாக தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் பட அதிபர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. இதனால் இரு பிரிவினருக்கும் மோதல் வலுத்தது.

முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. சம்பள உயர்வு அளிக்காத படங்களில் பணியாற்ற திரைப்பட தொழிலாளர்கள் மறுத்தனர். இதையடுத்து 2 வாரங்களாக படப்பிடிப்புகள் முடங்கி உள்ளன. இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படுத்த சிலர் முயற்சித்தனர். அது வெற்றி பெறவில்லை.

சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி திரைப்பட தொழிலாளர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். வடபழனியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்க அலுவலக வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் நடந்தது.

காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. உண்ணாவிரதத்தை நடிகர் ராதாரவி தொடங்கி வைத்தார். அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத் தலைவர் கல்வேஷ் திவாரி தலைமை வகித்தார். பெப்சி தலைவர் ராமதுரை, செயலாளர் சிவா, பொருளாளர் சண்முகம் பங்கேற்றனர்.

இந்த உண்ணாவிரதத்தில் லைட்மேன் சங்கம், மேக்கப் மேன் யூனியன், இயக்குனர் சங்கம், எடிட்டர்கள் சங்கம், புரெடக்சன் மானேஜர்கள் உள்ளிட்ட 23 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினர். இயக்குனர்கள் அமீர், ஜனநாதன், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

இன்று மாலை வரை உண்ணாவிரதம் நடக்கிறது.

Comments