பிரபல நீச்சல் வீரர் ஹீரோவாக நடிக்கும் 'சேவற்கொடி!!!

நீச்சலில் பல சாதனைகள் புரிந்தவர் அருண் பாலாஜி. கடந்த 1995 ஆம் ஆண்டு தனது 8 வயதில் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை கடலில் 10.41 மணி நேரத்தில் 32 கி.மீ.நீந்தி 'உலக சாதனை' செய்தவர். இதில் ஏற்கனவே சாதனை புரிந்த குற்றாலீஸ்வரனின் நீச்சல் சாதனையை வென்றவர். இனி இவர் சேவற்கொடி அருண பாலாஜி ஆகிவிடுவார்!

கதாநாயகியாக பாமா நடிக்கிறார்.இயக்குனர் லோகிததாசின் அறிமுகமான இவர் மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர்.'மைனா' கன்னட ரீமேக்கான 'ஷைலு'படத்திலும் நடித்திருக்கிறார். வில்லனாக பவன் நடிக்கிறார்.

கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் இரா.சுப்பிரமணியன். இயக்குனர்கள் சீமான், ராதாமோகன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் இவர். 'அபியும் நானும்' படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.

படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில், "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மற்றவர்களைப் பற்றிய ஒரு புரிதல் இருக்கும்.சிலரை ஒரு நிமிட சிரிப்பிலே பிடித்து விடும்.சிலரை இறுதி வரை பிடிக்காது.தனிப்பட்ட ஒருவரைப் பற்றி பலரும் ஒவ்வொரு விதமான புரிதலை வைத்திருப்பார்கள்.அப்படி தவறாக உணரப்படும் ஒரு மனிதனுக்கும், அப்படி உணர்ந்த ஒரு மனிதனுக்கும் இடையேயான மோதல் தான் இந்த கதை. வெவ்வேறு சூழலில் வாழக்கூடிய இருவர் யதார்த்தமாக சந்தித்துக் கொள்கிறார்கள். பின் அவர்களுக்குள் மோதல் வருகிறது.அது ஏன் எப்படி ? என்பது தான் கிளைமாக்ஸ்.

திருசெந்தூர் கடற்கரையோரமுள்ள கிராமங்களின் பின்னணியில் கதை உருவாகியுள்ளது. ஒரு சூரசம்ஹாரத்தின்போது நாயகன், நாயகி, வில்லன் மூவரும் சந்திக்க நேர்கிறது. அடுத்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியில் முடிகிறது கதை.இடையில் என்ன நடக்கிறது? என்பதே பரபரப்பான திரைக்கதை.

திருசெந்தூரில் நடைப் பெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் கதாநாயகன் கதாநாயகியை தேடும் காட்சியை மக்களோடு மக்களாக இருந்து படம் பிடித்தோம். திருசெந்தூர், கன்னியாகுமரி சாலையில் நாயகன் அருண் பாலாஜியும் வில்லன் பவனும் மோதிக் கொள்ளும் சேசிங் காட்சி ஒன்றையும் சிரமப் பட்டு படமாக்கி இருக்கிறோம். படத்தின் காட்சிகள் அனைத்தும் யதார்த்தமாக அதேவேளையில் ஜனரஞ்சமாகவும் இருக்கும்" என்றார்.

பனேரி பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் மகரந்த் கமலாகர்,ஆனந்த் ரெட்டி இருவரும் மிகுந்த பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

Comments