இந்தியன் படக் கதையை ரஜினிக்காகத்தான் உருவாக்கினேன் - ஷங்கர்!

Friday, February 24, 2012
இந்தியன் படக்கதையில் முதலில் நடிக்கவிருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். ஆனால் பின்னர் கமல் நடித்தார் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விகடன் மேடையில் வாசகர் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், "'இந்தியன்’ கதையை முதன்முதலில் ரஜினி சாருக்குத்தான் சொன்னேன் என்பது பலருக்குத் தெரியாது. கதை, திரைக்கதை, முழுமை அடையாத ஆரம்பக் கட்ட நிலையில் சொன்னதால் அதைச் செய்வதில் ரஜினி சாருக்குத் தயக்கம் இருந்தது. 'இந்தியன்’ படம் முடிந்து, அவருக்குப் போட்டுக் காட்டினேன். படம் முடிந்ததும் ஓடி வந்து என்னை இறுக்கிக் கட்டியணைத்து, 'சூப்பர்... சூப்பர்...’ எனத் தட்டிக்கொடுத்து, 'இப்படி எனக்கு நீங்க சொல்லவே இல்லியே’ என்று ஆச்சர்யப்பட்டார்.

நீங்கள் உற்றுப்பார்த்தீர்களானால் 'இந்தியன்’ தாத்தா, இன்டர்வெல் காட்சியில் உட்கார்ந்தபடியே ஈஸி சேர் பலகையால் நெடுமுடி வேணுவைத் தட்டிவிடுவார். வர்மக் கலையில் அவரை வீழ்த்திக் கீழே கிடக்கிற துண்டை எடுத்து ஸ்டைலாகத் தோளில் போடுவார். பிறகு, எழுந்து கலைந்த முடியை ஸ்டைலாகக் கோதி சரி செய்வார். இது ரஜினி சாரை மனதில்வைத்து நான் உருவாக்கிய காட்சி என்பது கமல் சாருக்குத் தெரியாது. அதை முற்றிலும் அவரது ஸ்டைலில் வேறுவிதமாகச் செய்து அசத்தி இருப்பார்.

ரஜினி சார் இப்போதுகூட, 'நான் முதல்வன் பண்ணாததுகூட எனக்கு வருத்தம் இல்ல... 'இந்திய’னைத்தான் மிஸ் பண்ணிட்டேன்!’ என்று சொல்வார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments