படிப்பதில் கிடைக்கும் ஆனந்தமும், சுகமும் வேறு எதிலும் கிடைக்காது. ரஜினி!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ் ணன் கனடா நாட்டின் இயல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள் ளார். இதையொட்டி சென்னையில் நேற்று அவருக்கு பாராட்டு விழா நடந்தது. ‘உயிர்மை’ மனுஷ்யபுத்ரன் வரவேற்றார். எஸ்.ஏ.பெருமாள், வெ.இறையன்பு, கவிஞர் வைரமுத்து, விஜயசங்கர், கு.ஞானசம்பந்தம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில் ரஜினி பேசியதாவது:

வாழ்க்கையில் கஷ்டம் வரும்போதுதான் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும். என்னுடைய வாழ்க்கையை ஒரு புத்தகமாக எழுத முயற்சித்தபோது, எனது பண்ணை வீட்டிற்கு வந்து 15 நாள் ராமகிருஷ்ணன் எழுதினார். படித்தபோது, அதில் நிறைய உண்மைகள் இருந்தது. இது யாருடைய மனதையாவது புண்படுத்துமே என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டேன்.

நான் எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும்தான் படித்தேன். ஆனால், வாழ்க்கையை தெரிந்துகொள்ள வெவ்வேறு புத்தகங்களைப் படித்தேன். நான் படித்த புத்தகங்கள்தான், என் வாழ்க்கையில் உதவிகள் செய்திருக்கின்றன. எனவே, எல்லோரும் நிறைய படிக்க வேண்டும். படிப்பதில் கிடைக்கும் ஆனந்தமும், சுகமும் வேறு எதிலும் கிடைக்காது. எழுத்து என்பது பவர்புல் விஷயம். சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பேசிய பேச்சு, இந்த உலகையே மாற்றியதை எல்லோரும் அறிவார்கள்.

கவிஞர் கண்ணதாசன் ஒரு காலத்தில் நாத்திகவாதியாக இருந்தார். அவரிடம், கம்பராமாயணத்தை எரிக்க கொடுத்தார்கள். எரிப்பதற்கு முன் அதில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமோ என்று படித்தார். படித்து முடித்து, அன்று முதல் ஆத்திகவாதியாக மாறிவிட்டார். படைப்புக்கு அவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது. பணம் என்ற கஷ்டம் எழுத்தாளர்களுக்கு வரக்கூடாது. படைப்பாளிகளுக்கு பதிப்பகங்களும், பத்திரிகைகளும் நல்ல ஊதியம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மேலும் நன்றாக எழுதுவார்கள். நல்ல, நல்ல சிந்தனைகள் வளரும். இவ்வாறு ரஜினி பேசினார்.

Comments