சினிமாவுக்கே முதலிடம்: அரசியலில் என்னை தொடர்புபடுத்த வேண்டாம்- நடிகர் வடிவேலு ஆவேசம்!

விஜயகாந்தும், வடிவேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மோதிக்கொண்டனர். இதையடுத்து விஜயகாந்த் கட்சியை எதிர்க்க வடிவேலு தி.மு.க. அணியில் சேர்ந்து பிரசாரம் செய்தார். தேர்தலில் தி.மு.க. தோற்றதால் வடிவேலு அதிர்ச்சியானார். புதுப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்.

சமீபத்தில் அ.தி.மு.க. வுக்கும், விஜயகாந்துக்கும் தகராறு ஏற்பட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் சமரசம் ஆகி மீண்டும் சினிமாவில் நடிக்க தீவிரமாக வடிவேலு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாயின. அ.தி.மு.க.வில் இணையப்போவதாகவும் கிசுகிசுக்கள் வந்துள்ளது.

இதுகுறித்து வடிவேலுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனது தாயை கவனித்துக் கொள்வதுதான் இப்போது எனக்கு முக்கியம். அவர் உடல்நலம் குன்றி இருக்கிறார். விரைவில் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நான் முதலில் ஒரு நடிகன். மக்களை சந்தோஷப்படுத்துவதை தொடர்ந்து செய்வேன். இந்தநேரத்தில் அரசியலில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவதை நான் விரும்பவில்லை. அரசியலோடு என்னை இணைத்து வெளியாகும் செய்திகள் மூலம் கற்பனைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

பொதுவாக எல்லாவற்றுக்கும் நேரம் முக்கியம். சிலருக்கு அந்த நேரம் சாதகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு எதிராக இருக்கும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய முக்கியத்துவம் எல்லாம் சினிமாவில் நடிப்பதுதான். அதில்தான் முழு கவனத்தையும் செலுத்துகிறேன்.

நான் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த படம் திரையுலகில் எனது மறுபிரவேசத்தை பறைசாற்றுவதாக இருக்கும்.

இவ்வாறு வடிவேலு கூறினார்.

Comments