அவார்ட் வாங்கணும்... அழகுல அசத்தணும்! - சஞ்சனா சிங்!

Tuesday, February 21, 2012
அது என்னமோ எல்லா நடிகைகளுக்குமே செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அப்படி ஒரு இஷ்டம். சஞ்சனா சிங்கும் அதற்கு விலக்கல்ல.. ஆனால் அவர் வளர்ப்பது அழகான மெத்து மெத்தென்ற முயல்குட்டிகளை.

இந்த முயல்கள் இருப்பது இங்கல்ல... மும்பையில். தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தாலும், இந்த முயல்களுக்காகவே அவர் வாரம் ஒருமுறை மும்பை பறந்துவிடுகிறார். இவற்றுக்காக தனி படுக்கையறை, மெத்தை என மும்பை வீட்டில் ராஜ உபசாரமாம்.

ஏங்க இது கொஞ்சம் ஓவரா இல்லையா என்றால்..., "அப்படியெல்லாம் சொல்லாதீங்க. முயல்கள் ரொம்ப மென்மையானவை. ரொம்ப அற்புதமான பாசப் பிராணிகள். நான் எவ்வளவு டென்ஷனா இருந்தாலும், ஒரு முறை இந்த முயல் குட்டிகளை தடவிப் பார்த்தாலே, யோகா பண்ண மாதிரி ஒரு ரிலாக்ஸ் மூடுக்கு வந்துடுவேன். இப்போ நான்கு குட்டிகள் வேறு போட்டிருக்கு. அதனால அவற்றைப் பார்த்துக் கொள்வதில் தனி சந்தோஷம் எனக்கு," என்கிறார் இந்தி கொஞ்சும் தமிழில்.

முயலுக்கே நேரத்தை ஒதுக்கினால், பட வாய்ப்புகள் என்னாவது?

"அது முக்கியம்தான். என் முதல் படம் ரேணிகுண்டா. அப்படியொரு அழுத்தமான வேடம். அந்த மாதிரி வேடம் எல்லோருக்கும் அமைந்துவிடாது. ஒரு ஹீரோனுக்குக் கூட கிடைக்காத பேர் எனக்கு கிடைச்சது. நண்பர்கள் கேட்டதற்காக கோ, மறுபடியும் ஒரு காதஸ், மயங்கினேன் தயங்கினேன், வெயிலோடு விளையாடு படங்களில் கெஸ்ட் ரோல் பண்ணேன். ஜஸ்ட் ஐட்டம் நம்பர்ஸ். ஆனா அதிலும் நான் தனியா தெரிஞ்சேன். கோ முதல் பாட்டை உங்களால மறக்க முடியுமா...சினிமாவில் நண்பர்கள் ரொம்ப முக்கியம்.

இப்போ யாருக்குத் தெரியும் படத்தில் செம ரோல், அதுவும் ஹீரோயின் வேடம் கிடைச்சிருக்கு. பார்க்கிறவங்கள அதிர வைக்கிற மாதிரி ஒரு கேரக்டர் அது. அடுத்த வருகிற எல்லாமே எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு அந்தஸ்து தரக்கூடிய படங்கள்தான். முத்திரை பதித்த இயக்குநர்களின் படைப்புகள். கேஎஸ் அதியமானின் தப்புத் தாளங்கள், தமிழ்ப் படம் சிஎஸ் அமுதனின் இரண்டாவது படம் என என் நம்பிக்கையை உயர்த்தும் படங்கள். சந்தோஷமா இருக்கு.

இது ஒரு ஆரம்பம்தான். இனி எல்லாமே நல்லா நடக்கும்னு நம்பிக்கை இருக்கு. எனக்கும் அவார்டு படம் பண்ண ஆசைதான். என்னைப் பொறுத்தவரை பணம் முக்கியமில்லை. நண்பர்கள் முக்கியம். நாலுபேருக்கு உதவியா இருக்கணும், தேவைக்கேத்த அளவு பணம் இருக்கணும்... அவ்வளவுதான்!," என்கிறார் சஞ்சனா.

இன்றைய தேதிக்கு சஞ்சனா சிங்தான் கோடம்பாக்கத்தின் ஹாட் கிளாமர் கேர்ள். கவர்ச்சியில் நமீதாவின் வாரிசு என்றால், நடிப்பில் தானே ரோல் மாடலா இருக்கணும் என்று ஆசைப்படும் அளவு ஆர்வமான நடிகை.

'ஹோம்லியா கிளாமரா? எது உங்க சாய்ஸ்' என்றால், "இதை நிறையபேர் கேக்குறாங்க... இரண்டுமே ஒரு நடிகையின் இரு பக்கங்கள். எனக்கு ரெண்டு ரோலுமே ஓகேதான். இரண்டையுமே அதன் எல்லை வரை போய் சவாலா எடுத்து நடிக்கணும். ஒண்ணு கைத்தட்டல் வாங்கணும்.. இல்லைன்னா, கவர்ச்சில கலக்கணும்... அதான் சஞ்சனா!," என்றார்.

பார்த்தாலே தெரியுதுங்கோ சஞ்சனா!

Comments