இயக்குநரான லஷ்மி ராமகிருஷ்ணா!!!

தமிழ் சினிமாவில் 'அம்சமான ஆன்டி' என்று பெயரெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணா, அடுத்து இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

பிரிவோம் சந்திப்போம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணா. தமிழில் இதுவரை 33 படங்கள் செய்துவிட்டார். தொலைக்காட்சி சீரியல்களிலும் வருகிறார்.

இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். தனது முதல் படத்துக்கு ஆரோகணம் என்று தலைப்பு வைத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணா. சத்தமில்லாமல் படப்பிடிப்பை ஆரம்பித்தவர், இப்போது கிட்டத்தட்ட முடித்தேவிட்டார்.

தனது படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணா கூறுகையில், "அரைச்ச மாவையே அரைக்காமல் புதுசா, கொஞ்சம் நேர்மையா ஒரு படம் வந்தால் மக்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள். உதாரணமா மௌனகுரு.

ஒரு சீரியஸான விஷயத்தை சீரியஸாகவே சொல்லாம ரொம்ப ஜாலியா சொல்லலாம். பாஸிட்டிவ்வா அணுகலாம் அப்படித்தான் ஆரோகணத்தை எடுத்திருக்கேன். மனசுக்கு நெருக்கமா நடந்த, பார்த்த ஒரு விஷயத்தை இதில் சொல்லி இருக்கேன்.

'ஆரோகணம்' படத்தை முதல் முதலாக என் சொந்த பேனரில், சொந்த பணத்தில் ஆரம்பித்தேன். ஒரு பரிட்ச்சார்த்த முயற்சி செய்யும் போது இன்னொருத்தர் காசில் விளையாட பயம் எனக்கு. முதல் பாதி முடித்து ஒரு டிவிடி யை மெடிமிக்ஸ் நிர்வாகத்தின் தலைவருக்கு அனுப்பிவைத்தேன். பார்த்துவிட்டு இந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்ற சொல்லி அவரே கையிலெடுத்துக்கொண்டார்.

நான் ரொம்ப பெரிய இயக்குநராகனும்னு படம் பண்ணவில்லை. எனக்கு இருக்கிற அறிவில் இந்த படத்தை பண்ணியிருக்கிறேன். சில விஷயங்களைச் சொல்லியிருக்கேன்," என்றார்.

சம்பத் , ஜெயப்பிரகாஷ் , விஜி சந்திரசேகர் , உமா பத்மநாபன், ராஜி, விஜயசாரதி ஆகியோருடன் விரேஷ், ஜெய் குஹேரனி என இரண்டு புதியவர்களை அறிமுகம் செய்கிறார் இந்தப் படத்தில் லட்சுமி.

சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய யுத்தம் செய் படத்துக்கு இசை தந்த கே இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற ‘ஆடுகளம்”, ‘ஈரம்” எங்கேயும் எப்போதும் படங்களின் எடிட்டர் கிஷோர் ஆரோகணத்தை எடிட் செய்கிறார்.

சரி... இந்தப் படத்தில் நீங்கள் நடிக்கவில்லையா என்றால்.... சிரித்தபடி, "கேஎஸ் ரவிக்குமார் ஸ்டைலை இந்தப் படத்தில் ஃபாலோ பண்றேன்", என்றார்!

Comments