தானே புயல் நிவாரணத்துக்கு ஜெயலலிதாவிடம், இன்று ரூ.8 1/2 கோடி நிதி உதவி வழங்கப்பட்டது: கமலஹாசன் ரூ.15 லட்சம் வழங்கினார்!

சென்னை::தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம், தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று (புதன்கிழமை) தலைமைச் செயலகத்தில் பலர் நிதியுதவி வழங்கினார்கள்.

அவர்கள் விவரம் வருமாறு:-

சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார், சட்டப் பேரவை துணைத் தலைவர் டி.தனபால், அரசு கொறடா பி. மோகன் ஆகியோர் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் - 57 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏ. வைத்தியலிங்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் ஆகியவற்றின் பணியாளர்கள் சார்பாக 26 லட்சத்து 71 ஆயிரத்து 638 ரூபாய்.

வனத்துறை அமைச்சர் கே.டி. பச்சமால் தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம், தமிழ்நாடு வன வளர்ப்புக் கழகம் ஆகியவற்றின் பணியாளர்கள் சார்பாக 50 லட்சத்து 63 ஆயிரத்து 482 ரூபாய்.

உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையரகம், தமிழ்நாடு கிடங்கு கழகம், மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையரகம் ஆகியவற்றின் பணியாளர்கள் சார்பாக 1 கோடியே 6 லட்சம் ரூபாய்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் - 15 லட்சம் ரூபாய்.

பொள்ளாச்சி என். மகாலிங்கம் சக்தி குழும நிறுவனத்தின் சார்பாக 1 கோடி ரூபாய்.

சென்னை, அமால் கமேஷன் பிரைவேட் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி 1 கோடி ரூபாய்.

தமிழ் திரைப்பட நடிகர் கமலஹாசன் ரூ.15 லட்சம்.

இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.எம். பாஷின் 1 கோடி ரூபாய்.

சென்னை சில்க்ஸ் இணை மேலாண்மை இயக்குநர் கே. மாணிக்கம் 50 லட்சம் ரூபாய்.

தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளத்தின் தலைவர் கே.தங்கராஜ் 50 லட்சம் ரூபாய்.

ஜெமினி இன்டஸ்டீரிஸ் மற்றும் இமேஜிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஏ. ரவிசங்கர் பிரசாத் 50 லட்சம் ரூபாய்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கோபாலகிருஷ்ணன் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் சார்பாக 30 லட்சம் ரூபாய்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே. அய்யப்பன் 25 லட்சம் ரூபாய்.

கும்பகோணம், சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயல் அலுவலருமான டாக்டர் என். காமகோடி 25 லட்சம் ரூபாய்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

வேல் டெக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே.ரங்கராஜன் மகாலஷ்மி 20 லட்சம் ரூபாய்.

சென்னை பிரஸ் கிளப் சார்பாக 10 ஆயிரம் ரூபாய்.

முதல்-அமைச்சரிடம், தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறு வாழ்வுக்காக 8 கோடியே 50 லட்சத்து 97 ஆயிரத்து 120 ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 64 கோடியே 84 லட்சத்து 7 ஆயிரத்து 747 ரூபாயாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments