இளையராஜா பங்கேற்ற 'ஜேசுதாஸ் 50': ஐஸ்வர்யா மூலம் ரஜினி வாழ்த்து!

பிரபல பாடகர் கே ஜே ஜேசுதாஸ் பின்னணி பாட ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதைக் கொண்டாடும் வகையில் திரை இசை மற்றும் சாஸ்திரீய இசை மேதைகள் பங்கேற்ற 'ஜேசுதாஸ் 50' பொன்விழா நிகழ்ச்சி சமீபத்தில் கொச்சியில் நடந்தது. இசைஞானி இளையராஜா, இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா உள்பட இசைத் துறையின் முக்கிய பிரபலங்கள் கலந்து விழாவில் கொண்டனர்.

இந்த விழாவுக்குச் செல்ல முதலில் முடிவெடுத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியால், தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை. தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவை தன் சார்பில் அனுப்பி வைத்தார்.

விழாவில் பங்கேற்ற அவரை மிகுந்த அன்போடு வரவேற்றனர் ஜேசுதாஸும் இளையராஜாவும்.

"இந்த விழாவுக்கு எப்படியும் வந்துவிட வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. ஜேசுதாஸ் குரல் என் படங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. அவரது இசைப் பயணம் மேலும் தொடர வாழ்த்துகள்" என்று ரஜினி தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ரஜினியின் வாழ்த்துக் கடிதத்தை ஐஸ்வர்யா வாசித்த போது, அரங்கம் கைதட்டி மகிழ்ந்தது.

கொச்சியிலிருந்து சென்னை திரும்பும்போது இளையராஜா - ஜேசுதாஸ் பக்கத்தில் அமர்ந்து வரும் வாய்ப்பு கிடைத்ததாகவும், இரு தந்தைகளின் அன்பான பாதுகாப்பில் வந்தது போல உணர்ந்ததாகவும் பின்னர் ஐஸ்வர்யா குறிப்பிட்டிருந்தார்.

Comments