அரிவாளை கீழே போடுங்கய்யா...! - இளையராஜா!!!

சினிமாவில் இன்றைக்கு அரிவாள், ரத்தம் என வன்முறை அதிகரித்து வருகிறது. ஆயுதத்தை கீழே போடுங்கள், அன்பை உபயோகியுங்கள், என்றார் இசைஞானி இளையராஜா.

ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள செங்காத்து பூமியிலே படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இளையராஜா கூறுகையில், "செங்காத்து பூமியிலே வன்முறைக்கு எதிரான படம். இன்றைய காலகட்டத்தில் அப்படி வந்திருக்கும் ஒரே படம் என்று கூடச் சொல்லலாம்.

இப்படத்தின் இயக்குனர் ரத்னகுமார் என்னிடம் இசையமைக்க கேட்டபோது வழக்கமான “என்ன... அருவா வெட்டு குத்து படம் தானா, வன்முறையை விதைச்சிட்டு என்னத்த அறுவடை பண்ணப் போறீங்க” என்று கேட்டேன். உடனே படத்தை முடிச்சிட்டு வந்து போட்டுக் காட்டினார்.

ஒரு நல்ல கருத்தை சொல்லும் படமாக இருந்ததால் இசையமைக்க ஒப்புக் கொண்டேன்.

மனிதனாகப் பிறக்கிறோம், வாழ்கிறோம், மடிகிறோம்... இந்த வாழ்க்கையை மனிதன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டாமா... கோபத்தின் வெளிப்பாடுதான் வன்முறை. கோபத்தின் ஆயுதத்தை தூக்குவதற்கு முன் தனது குடும்பத்தையும், குழந்தைகளையும் நினைத்து பார்த்தால் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற எண்ணம் வராது.

ஆயுதத்தை கீழே போடுங்கள், அன்பை உபயோகியுங்கள். வன்முறை காணாமல் போகும். இதைத்தான் செங்காத்து பூமியிலே படம் பிரதிபலிக்கிறது. பெண்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். அப்போதுதான் வன்முறையின் வலி புரியும். தென் தமிழகத்து மக்களின் வாழ்க்கை, வலிகளை மிக யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார் ரத்னகுமார்.

இது போன்ற சிறு பட்ஜெட் படங்களுக்கு, கதையுள்ள கருத்துள்ள படங்களுக்கு பத்திரிகையாளர்கள் ஆதரவு தந்து உற்சாகப்படுத்தி வரவேற்க வேண்டும். பெரிய நடிகர்கள் படங்களுக்கு மட்டுமே ஆதரவு என்ற நிலைமை மாற வேண்டும். நல்ல கதைகளுக்கு நடிகர்கள் தேவை இல்லை," என்றார்.

ஏற்கெனவே, "வன்முறை, அரிவாள் கலாச்சாரம் அதிகமாக உள்ள படங்களுக்கு இசையமைக்க மாட்டேன். நீ அரிவாள கீழே போடுய்யா... இசை அமைக்கிறேன்," என இயக்குநர் அமீரிடமே சொன்னவர் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Comments