ஆதரவு கொடுத்திட்டாரு கார்த்திக்... இனி அதிமுகவுக்கு அமோக வெற்றிதான்!!!

தேர்தல் என்ற சீரியஸான நாடகத்தில் அவ்வப்போது சில சிரிப்பு கேரக்டர்கள் எட்டிப் பார்த்து காணாமல் போகும்.

அந்தக் கேரக்டர்களில் ஒருவராகிவிட்டார் நடிகர் கார்த்திக். சும்மா நடிகர்னா கோவிச்சுக்குவார்... நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்து, அவர்கள் சீட் எதுவும் தராததால், 'கூட்டணியை' முறித்துக் கொண்டு வெளியில் வந்தவர் கார்த்திக்.

பின்னர் சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். அவர்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. கார்த்திக்குக்காவது தெரியுமா தெரியவில்லை.

இந்த நிலையில் வரும் சங்கரன் கோயில் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக கார்த்திக் கட்சி அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து கார்த்திக் பிரச்சாரம் செய்யப் போகிறாராம்.

இதுகுறித்து கார்த்திக் கட்சியின் மாநிலத் தலைவர் பாலமுருகன் கூறுகையில், "சங்கரன்கோவில் தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. இந்த தொகுதியில் தனித்து போட்டியிட்டபோதே நாங்கள் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றோம். கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது அ.தி.மு.க.வை ஆதரித்தோம். அதேபோல் சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் முத்துச்செல்வியை வெற்றிபெற செய்யவேண்டும் என்று எங்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அதன்படி அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக கார்த்திக் பிரசாரம் செய்வார். அவரது பிரசாரதேதி தேர்தல்தேதி அறிவித்தபிறகு தெரிவிக்கப்படும். அடுத்த பொதுத்தேர்தலின்போது சங்கரன்கோவில் தொகுதியை பொதுத்தொகுதியாக மாற்றவேண்டும் என்று வலியுறுத்துவோம்," என்றார்.

Comments