கொலவெறி அனிருத்தின் அநியாய அடக்கம்!!

Thursday,January 05, 2012
உலகின் சந்து, பொந்துகளில் எல்லாம் ஒலி(ளி)த்து கொண்டிருக்கும் பாடல் என்றால், அது கொலவெறி தான். ஒரே பாட்டிலேயே உலகம் முழுவதையும் தன் பக்கம் திரும்ப வைத்த கொலவெறி பாடலின் இசையமைப்பாளர் அனிருத், ரொம்பவே அடக்கமாக, அமைதியாக இருக்கிறார். 3 படத்தின் தற்போதை நிலை என்ன என்று அனிருத்திடம் தொலைபேசியில் பேசினோம். மும்பையில் இருந்த அவர் கூறுகையில், தற்போது படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் பணி நடந்து வருகிறது. பிப்ரவரி முதல்வாரத்தில் படம் திரைக்கு வரலாம் எனத் தெரிகிறது என்றார்.

ஒரே பாட்டில் ஓஹோன்னு பாராட்டும், நிறைய ரசிகர்களும் கிடைச்சாச்சு போல என்று கேட்டதும், அப்படி எல்லாம் நான் எடுத்துக்கல, எப்பவும் போல என்னுடைய வேலையை பார்த்துக்கிட்டு இருக்கேன் என்கிறார் அடக்கமாய்.

முதல் படம் வெளிவருவதற்கு முன்பே இந்தி படங்களிலும் வாய்ப்பு வந்துள்ளதே என்று கேட்ட போது, இம்மாதம் மட்டும் நிறைய புதுப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. படத்தை தேர்ந்தெடுப்பதில் ரொம்ப கவனமாக உள்ளேன். இந்தியில் கே.எஸ்.ரவிக்குமார் சார் இயக்கும் படம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் வேறு ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இதைத்தவிர தமிழில் ஒரு படமும், தெலுங்கில் ஒரு படமும் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளேன் என்றார்.

அனிருத்திடம் பேசியதில் இருந்து, எவ்வளவு பெரிய வெற்றி கிடைச்சாலும், புகழ் அடைந்தாலும் அதை தலையில் ஏற்றி கொண்டாடமால், பார்க்கும் வேலையை மட்டும் ரொம்ப கவனமாக சிறப்பாக செய்ய வேண்டும் என்பது மட்டும் புரிகிறது.

Comments