'முழுக்கு'ப் போட்ட நயனதாரா- பிரபுதேவாவின் கதி என்ன?!

எந்த வேகத்தில் பிரபுதேவா மீது காதலில் விழுந்தாரோ அதே வேகத்தில் அவரை விட்டுப் பிரிந்தும் விட்டார் நயனதாரா. இதனால் பிரபுதேவாவின் கதி என்ன என்பது திரையுலகினர் மத்தியில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

பிரபுதேவாவின் திருமண வாழ்க்கையே பெரும் மர்மக் கதையாகவே இருந்து வருகிறது. ரம்லத்தை அவர் திருமணம் செய்த ஸ்டைலும், அதை மறைத்து பல ஆண்டுகளாக வாழ்ந்த விதமும் அனைவராலும் மறக்க முடியாதது.

ரம்லத்துடன் அவர் கிட்டத்தட்ட ரகசிய வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தார். இவர்தான் எனது மனைவி என்று அவர் வெகு காலமாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. காரணம், பிரபுதேவாவின் குடும்பத்தார் இந்தத் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை என்பதால். இதனால் 3 குழந்தைகள் பிறந்து அவர்கள் ஓரளவுக்குப் பெரியவர்களாக ஆன பிறகும் கூட ரகசிய வாழ்ககைதான் வாழ்ந்து வந்தார் பிரபுதேவா.

இந்த நிலையில் பிரபுதேவா-ரம்லத் தம்பதியின் குழந்தை இறந்தபோது பெரும் சோகமடைந்தார் பிரபுதேவா. அந்த சோகத்தில் பங்கெடுக்க வந்தவர்தான் நயனதாரா. அப்போது அவரும் கூட சோகத்தில்தான் இருந்து வந்தார். சிம்புவிடமிருந்து பிரிந்த சோகம். இரண்டு சோகங்களும் ஒன்று கலக்கவே, அது அவர்களுக்கு சுகமாக தெரிந்தது- புதிய காதல் கதை பிறந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர் பிரபு தேவாவும் நயன்தாராவும். இந்தக் காதலுக்காக தனது மனைவியை கடுமையாக பிடிவாதம் பிடித்து விவாகரத்தும் செய்தார் பிரபுதேவா. தனது கணவரை தக்க வைக்க எப்படியெல்லாமோ முயற்சித்தார் ரம்லத். ஆனால் பாவம், அந்தப் பெண்ணின் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை. அவரும் கூட தனது மனதை தேற்றிக் கொண்டு கணவரை இன்னொரு பெண்ணுக்கு தாரை வார்த்துக் கொடுக்க நேரிட்டு விட்டது. இதனால் விவாகரத்து நடந்தது, பாகப்பிரிவினையும் நடந்து முடிந்தது.

அதன் பிறகு நடந்த அத்தனையுமே படு சுவாரஸ்யமானவை. பிரபுதேவாவை கல்யாணம் செய்வதற்காக மதம் மாறினார் நயனாரா. சினிமாவுக்கும் கூட முழுக்குப் போட்டார். சிம்பு மீண்டும் ஒருமுறை தனது படத்தில் ஆட வேண்டும் என்று வைத்த வேண்டுகோளையும் கூட நிராகரித்தார்.

தமிழில அவர் கடைசியாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்திருந்தார். அதேபோல தெலுங்கில், ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்தார்.

இத்தனையும் செய்து விட்டு பிரபுதேவாவிடம் கல்யாணம் என்று பேச்சை ஆரம்பித்த போதெல்லாம் அவர் பிடி கொடுக்கவே இல்லை. என்ன என்று ஆராய்ந்து பார்த்தபோதுதான், ரம்லத் மறறும் பிள்ளைகள் மீது இருந்த பாசத்தை பிரபுதேவாவால் விட முடியவில்லை என்பது.

நயனதாராவுக்கு தெரியாமல் ரகசியமாக தனது பிள்ளைகளைப் பார்த்து கொஞ்சி வந்தார் பிரபுதேவா. ரம்லத்தையும் கூட அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் நயனதாராவுக்குத் தெரிய வர ஷாக் ஆகி விட்டார். இதனால் இடையில் பிரபுதேவாவுடன் சண்டை போட்டு சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் விட்டார். இதையடுத்து அங்கு ஓடிய பிரபுதேவாவை வீட்டுக்குள்ளேயே நயனதாரா சேர்க்கவில்லை. இதனால் தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இருப்பினும் இதெல்லாம் கப்சா, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, திருமண ஏற்பாடுகள் தீவிரமாகநடந்து வருவதாக பிரபுதேவா, நயனதாரா தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவருக்கும் இடையிலான பிளவு மிகப் பெரிதாகி விட்டதாகவும், இனிமேல் சேர முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பிளவுக்கு நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் பிரபுதேவா நெருக்கம் காட்டியதும் ஒரு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

ஆனால் ரம்லத் மற்றும் பிள்ளைகள் மீதான பாசத்தை பிரபுதேவாவால் கைவிட முடியாமல் தவிப்பதால்தான் நயனதாரா பிரிந்து போய் விட்டதாக கூறப்படுகிறது.

இப்போது மீண்டும் ஒரு சோகப் புள்ளியில் பிரபுதேவாவும், நயனதாராவும் வந்து நிற்கின்றனர். இந்த சோகத்தைப் பங்கு போடப் போவது யாரோ...

Comments