அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு ரஜினி சேவை செய்ய வேண்டுமா? - லதா ரஜினி!

அரசியலுக்கு வந்தால்தான் ஒருவரால் மக்கள் பணியாற்ற முடியும் என்றில்லை. என் கணவர் ரஜினி ஒரு சிறந்த தேசியவாதியாக மக்கள் பணியை தொடர்வார், என்று லதா ரஜினி கூறினார்.

ஆஷ்ரம் ஆர்ட்ஸ் அகாடமி விருது வழங்கும் விழாவில் கலையுலக சாதனையாளர்களுக்கு ரஜினி விருது, செவாலியே சிவாஜி விருது மற்றும் பீஷ்ம விருதுகளை ரஜினி வழங்கினார். இந்த விழாவில் ரஜினியின் குருநாதர் கே பாலச்சந்தருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ரஜினி விருது வழங்கப்பட்டது.

மறைந்த நடிகர் ஷம்மி கபூர், பழம்பெரும் நடிகை ஆஷா பரேக் ஆகியோருக்கும் ரஜினி விருது வழங்கப்பட்டது.

மூத்த நடிகர் வீரராகவனுக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது வழங்கப்பட்டது.

நடிகை எம்என் ராஜம், பழம்பெரும் பாடகர் ஏ எல் ராகவன், கடம் வித்வான் விக்கு விநாயக்ராம், கல்யாண கிருஷ்ண சோமையாஜி, வேணுகோபால் சந்திரசேகர் மற்றும் சினிமா பத்திரிகையாளர் – பிஆர்ஓ பிலிம்நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கு பீஷ்மா விருது வழங்கப்பட்டது.

ரஜினியைப் போல யாருமில்லை...

விழாவில் இயக்குநர் கே பாலச்சந்தர் பேசுகையில், "ரஜினியைப் போன்ற குருபக்தி கொண்ட ஒருவரை நான் எங்குமே பார்த்ததில்லை. யாரோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்வானர். இந்தியாவின் நிகரற்ற தவப்புதல்வர். திரையுலக சரித்திரத்தையே மாற்றிய சாதனையாளர்.

கல்வித் துறையில் லதா ரஜினி ஆற்றும் பணிகள், இந்த துறைக்காகவே தன்னை அவர் அர்ப்பணித்துக் கொண்டுள்ளதைக் கண்டு நான் பெருமையும் உவகையும் அடைகிறேன்," என்றார்.

ஆஷா பரேக்

பழம்பெரும் பாலிவுட் நடிகை ஆஷா பரேக் கூறுகையில், "இன்று நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்துள்ளேன். நான் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தது ஷம்மி கபூருடன்தான். இன்று அவருடன் எனக்கும் பெருமைக்குரிய ரஜினி விருது கிடைத்திருப்பது நிறைவாக உள்ளது. ரஜினி சிறந்த மனிதர். ஒப்பற்ற கலைஞர். யாரோடும் ஒப்பிட முடியாத தனித்தன்மை மிகுந்தவர். தேசத்தின் இணையற்ற தவப்புதல்வர்," என்றார்.

அரசியலுக்கு வந்தால்தானா...

இந்த விழாவில் லதா ரஜினியின் பேச்சு மிக முக்கியமானதாக அமைந்தது. அவர் பேசுகையில், "இந்தியாவின் மிகச் சிறந்த தேசியவாதி என் கணவர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். இதைச் சொல்லும்போதே சிலிர்ப்பாக உள்ளது. நிறைய பேர் என் கணவர் அரசியலுக்கு வருவாரா என்று கேட்கிறார்கள். அரசியலுக்கு வந்துதான் ஒருவர் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதில்லை. என் கணவர் ஒரு தேசியவாதியாக, தேசப்பற்றாளராக இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் தன் சேவைகளைத் தொடர்வார்," என்றார் அவர்.

Comments