நண்பன் படத்திற்கு தடை கோரி மனு!!!

நண்பன் படத்தில், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனரின் புகழை களங்கப்படுத்தி, அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ள, இயக்குனர் ஷங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; படத்தை தடை செய்ய வேண்டும் எனக் கோரி, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயசீலன், காவல் துறை கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது:ஷங்கர் இயக்கிய, "நண்பன் படத்தில், மோசடி கதாபாத்திரத்திற்கு, "பாரிவேந்தர் என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

இன்னொரு பெண் கதாபாத்திரம் மதுபோதையில், "பாரிவேந்தராவது, பூரிவேந்தராவது என்றும்; மற்றும் ஒரு இடத்தில், "பாரி, பூரி, கக்கூஸ் லாரி என்றும், வசனத்தை பயன்படுத்தி இருக்கிறார். இதன் மூலம், பல லட்சம் மக்களால் பாரிவேந்தர் என்று அழைக்கப்படுகிற எங்கள் கட்சியின் நிறுவனர் புகழுக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது.இதற்கு முன்பாக, அவர் இயக்கிய, "சிவாஜி படத்தில், தமிழினத்தின் அடையாளமான வள்ளல் பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும், கறுப்பாக சித்தரித்து, தமிழ்ப் பெண்கள் கறுப்பானவர்கள் என்றும், யாரும் அவர்களை உரிமையாக்கிக் கொள் ளலாம் என்றும் சித்தரித்திருக்கிறார்.

வேறு ஒரு படத்திலும், பல லட்சம் கட்சி மற்றும் பார்க்கவ குல சமுதாயத்தால் போற்றப்படுகிற எங்களுடைய தலைவரின் பெயரை, குடிகாரனுக்கு சூட்டி, அவன், பெண்களிடம் தகாத முறையில் நடப்பது போல காட்சி அமைத்து, அவர் பெயரை களங்கப்படுத்தி இருக்கிறார்.இவ்வாறு, எங்கள் நிறுவனத் தலைவர் புகழை கெடுக்கும் விதமாக இயக்குனர் ஷங்கர், அவதூறான, தரக்குறைவான, சட்டத்திற்கு புறம்பானவைகளை, தவறான உள்நோக்குடன் பயன்படுத்தி, தன் படத்திற்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்.எங்கள் நிறுவனர், அவரை பின்பற்றுகிற கட்சி மற்றும் சமுதாய மக்களின் மனதை புண்படுத்தி களங்கம் கற்பித்த, "நண்பன் பட இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிந்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Comments