மல்டி ஸ்டார் படம் தவறு இல்லை!!!

ஒரே படத்தில், பல ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பது தவறு இல்லை’ என்றார் ஸ்ரீகாந்த். மேலும் அவர் கூறியதாவது: ‘ரோஜாக்கூட்டம்’, ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘பார்த்திபன் கனவு’ படங்களில் பார்த்த மென்மையான ஸ்ரீகாந்தை மீண்டும் பார்க்க வைத்த படம், ‘நண்பன்’. தெலுங்கிலும் ‘டப்’ ஆகிறது. தமிழில் இனி நான் நடிக்கும் படத்தை ரொம்ப கவனமாகத் தேர்வு செய்யும்படி ஷங்கர் அறிவுரை சொன்னார். அதை கடைபிடிக்கிறேன். வெற்றிகரமான படத்தில் இருக்கும்போது மட்டுமே அப்படத்தில் நடித்தவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். அந்தவகையில், ‘நண்பன்’ எனக்கு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. ஒரே படத்தில் பல ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும்போது, நடிப்பில் ஆரோக்கியமான போட்டி ஏற்படுகிறது. தவிர, மற்ற ஹீரோக்களின் ரசிகர்களும் படத்தைப் பார்த்து நடிப்பை பாராட்டுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, படத்தில் எனது கேரக்டருக்கு சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், எத்தனை ஹீரோக்களுடனும் இணைந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன். இப்படி நடிப்பது ரசிகர்களுக்கும் பரவச அனுபவமாக இருக்கும். மல்டி ஸ்டார் படம் ஒன்றும் தவறு இல்லை. தமிழில் ‘பாகன்’ படத்தில் ஜனனி அய்யருடன் நடிக்கிறேன். மலையாளத்தில் பிருத்விராஜின் வேண்டுகோளுக்காக, அவர் ஹீரோவாக நடிக்கும் ‘ஹீரோ’ படத்தில், நடிகர் ஸ்ரீகாந்தாகவே கவுரவ வேடத்தில் வருகிறேன். தெலுங்கில் ‘நிப்பு’ படத்தில் ரவிதேஜாவுடன் சேர்ந்து நடிக்கிறேன். எனக்கு ஜோடி, பாவனா.

Comments