ரூ 1.5 கோடி மோசடி: புவனேஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Thursday,January 05, 2012
சென்னை: தொழிலதிபரிடம் ரூ.1.5 கோடி கடன் வாங்கிவிட்டு, அதை கொடுக்காததாக தாக்கல் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.கே.நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.குருநாதன் தாக்கல் செய்த மனுவில், "நான் கட்டிட உள்அலங்காரப் பணி தொடர்பான காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறேன். எனக்கு சில ஆண்டுகளாக சம்பூர்ணா என்பவர் நண்பராக உள்ளார். இவர் அஷ்டலட்சுமி பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்.

டி.வி. நடிகை டி.புவனேஸ்வரியை, சம்பூர்ணாதான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து நானும், புவனேஸ்வரியும் நண்பர்கள் ஆனோம். என்னிடம் அதிக பணம் புழங்கியதை புவனேஸ்வரி தெரிந்து கொண்டார்.

எனவே எனது நட்பை பயன்படுத்திக்கொண்டு என்னிடம் கடன் கேட்டார். தொலைக்காட்சி தொடர் தயாரிக்கப்போவதாகவும், அதற்கு பணத்தை கடனாகத் தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அவரது வார்த்தையை நம்பி, நானும் எனது எனது நண்பர் வட்டாரத்தில் கிடைத்த பணத்தையும் சேர்த்து புவனேஸ்வரிக்கு கடன் கொடுத்தேன்.

கடந்த 2010 ஆகஸ்டு மாதம் முதல் 2011 ம் ஆண்டு தொடக்கம் வரை ரூ.1 கோடியே 50 லட்சம் தொகையை கடனாக கொடுத்தேன். ஆனால் அவர் தொலைக்காட்சி தொடர் எதையும் எடுக்கவில்லை என்று தெரிந்தது. எனவே கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டேன்.

இதனால் என்னுடன் பேசுவதைத் தவிர்த்தார். நான் போன் செய்தால் புவனேஸ்வரி பேசுவதில்லை. பணம் கேட்க சென்றால், சட்டவிரோதமான நடவடிக்கைகள் மூலம் அவர் தப்பிவிடுவார். கடனை திருப்பிக்கேட்டதால், சில சமூகவிரோதிகளை வைத்து எனக்கும், எனது குடும்பத்துக்கும் அச்சுறுத்தல் தருகிறார்.

அவர் ஒரு கட்சியில் செயலாளராக இருப்பதால் அவருக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது. அதை பயன்படுத்தி, கடனை திருப்பித் தருவதைத் தவிர்க்கிறார்.

இதனால் வேறு வழியில்லாமல் கே.கே.நகர் போலீசில் கடந்த 29.8.11 அன்று புவனேஸ்வரி மீது புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் விசாரணை எதுவும் மேற்கொள்ளவில்லை. எனவே எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து, புவனேஸ்வரியை விசாரிக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும்", என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி மதிவாணன் விசாரித்தார். விசாரணை முடிவில், "மனுதாரரின் புகாரின் அடிப்படையில், புவனேஸ்வரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். அவர் மீது குற்ற முகாந்திரம் இருப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் மீது இன்னும் 6 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது," என்று தீர்ப்பளித்தார்.

Comments