திரை விமர்சனம் - பள்ளிக்கூடம் போகாமலே!!!

Sunday, November 1, 2015
Chenna:விளையாட்டில் கெட்டிக்காரனாக விளங்கும் நாயகன் தேஜஸ் படிப்பில் முட்டாளாக இருக்கிறார். இதனால், அவரது அப்பா அவரை எந்நேரமும் திட்டிக்கொண்டிருக்க, பள்ளி ஆசிரியரும் அவரை அவ்வபோது, சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப் படுத்துகிறார். இதனால் வேதனை அடையும் தேஜஸ், தற்கொலை செய்துக்கொள்ள முயற்ச்சிக்க, அவரது  வகுப்பறை மாணவி, நாயகி ஐஸ்வர்யா , விளையாட்டில் முதலிடத்தில் இருக்கும் நீ நினைத்தால், படிப்பிலும் முதலிடத்திற்கு வரலாம், என்று ஊக்கம் தருகிறார்.

ஐஸ்வர்யாவின் ஊக்கத்தினால், படிப்பில் கவனம் செலுத்தி, வகுப்பில் முதல் மாணவராக வரும் தேஜஸ், ஐஸ்வர்யாவுடன் நட்பாக பழகுகிறார். இதற்கிடையில், பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக தயாராகும், தேஜஸ் - ஐஸ்வர்யா, திடீரென்று காணாமல் போய்விடுகிறார்கள்.
இருவரும் காதலித்து ஓடிவிட்டார்களோ, என்ற கோணத்தில் போலீஸ் அதிகாரி கணேஷ் வெங்கட்ராம், விசாரணை நடத்த, மாணவர்கள் கடத்தப்பட்டிருக்கும் உண்மையை கண்டுபிடிக்கிறார். மாணவர்கள் எதனால் கடத்தப்பட்டிருக்கிறார்கள் , என்பதை கண்டறியும் கணேஷ் வெங்கட்ராம்,  அவர்களை மீட்டாரா இல்லையா, என்பது தான் க்ளைமாக்ஸ்.
பிள்ளைகள் குறித்து பெற்றோர்களின் தவறுதலான புரிதலாலும், ஆசிரியர்களின் அடக்கு முறையாலும், மாணவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை, 'பள்ளிக்கூடம் போகாமலே' படத்தின் மூலம் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பி.ஜெயசீலன்.
பள்ளி மாணவராக நடித்துள்ள புதுமுமம் தேஜஸ் நடனம், நடிப்பு என்று, தனது வேலையை சரியாக செய்துள்ளார். அவரைப் போலவே மாணவி வேடத்தில் நடித்த ஐஸ்வர்யாவும், தனது வேடம் உணர்ந்து நடித்துள்ளார். இவர்களுடன் வில்லத்தனமான வேடத்தில் நடித்துள்ள புதுமுகம் திலீபனும் நடிப்பில் அசத்துகிறார்.
காக்கி சட்டை, என்றாலே கணேஷ் வெங்கட்ராம், தான் என்ற நிலை உருவானாலும், நல்ல வேடமாக இருந்தால், தொடர்ந்து காக்கி சட்டையை அணிய தாயார், என்று இந்த படத்திலும் அணிந்திருக்கிறார் கணேஷ் வெங்கட்ராம். திருடனை துரத்தி பிடிப்பது, தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டைப் போடுவது, என்றெல்லாம் இல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே, காணாமல் போன மாணவர்கள் குறித்து விசாரிப்பதும், பெற்றோர்களும், ஆசிரியர்களும்  பிள்ளைகளிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், என்று புத்திமதி சொல்லும் இடத்திலும், கணேஷ் வெங்கட்ராம், ஸ்கோர் செய்துள்ளார்.
இயக்குனர் ஏ.வெங்கடேஷ், இயக்குனர் ராஜ்கபூர், ஸ்ரீஹரி என படத்தில் நடித்த அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்துள்ளார்கள்.
யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும், சாம்சன் கோட்டூர்-ன் இசையும், கதைக்கு ஏற்ப பயணிக்கிறது.
மாணவர்கள் சம்மந்தமான கதையை  எப்படி சொல்ல வேண்டுமோ, அந்த விதத்தில் ரொம்ப சிறப்பாகவே சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெயசீலன். கமர்ஷியல் என்பதற்காக மாணவர்களை டூயட் பாட விடுவது, ஆசிரியர்களை கேலி கிண்டல் செய்வது, போன்றவற்றை தவிர்த்துவிட்டு, கண்ணியமான முறையில் இப்படத்தினை படமாக்கிய இயக்குனர் பி.ஜெயசீலனுக்கு ஆயிரம் அப்ளாஸ் கொடுக்கலாம்.

Comments