தமிழ் எனது சொந்த மொழி - சமந்தா பேட்டி!!!

12th of August 2015
சென்னை:சத்தமில்லாமல் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து வருகிறார் சமந்தா. மகேஷ் பாபுடன் லடாய் என்றாலும் அடுத்த அவருடைய படத்தில் நடிக்க சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என்று முன்னணி நடிகர்களுடன் நடிப்பது பற்றி சமந்தாவின் பேட்டி.

இப்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?

தனுஷுடன் ஒரு படம். சூர்யாவுடன் விக்ரம் குமார் இயக்கும் 24. விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரமுடன் 10 எண்றதுக்குள்ள. அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம்.

  
எந்தப் படம் முதலில் வருகிறது?

10 எண்றதுக்குள்ள. படத்தின் டப்பிங்கை முடிச்சிட்டேன். அக்டோபரில் படம் திரைக்கு வருகிறது. நான் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரம்.

பெங்களூர் டேய்ஸின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறீர்களாமே?

ஆமா, கெஸ்ட் ரோல் பண்ணுறேன்.

தெலுங்கில் என்ன படம் செய்றீங்க?

மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
 
நீங்கள் யாருடைய ரசிகை?
நான் சூர்யாவின் ரசிகை. எனது கல்லூரி நாட்களில் சூர்யாவை நேரில் பார்க்க முடியுமா என்று எண்ணி இருக்கிறேன். ‘காக்க காக்க’ படம் பார்த்த பிறகு அவரது தீவிர ரசிகையாகி விட்டேன். எப்போதும் கல்லூரி கலை விழாக்களில் கடைசி இருக்கையில்தான் உட்கார்ந்திருப்பேன்.
 
ஒருமுறை சூர்யா எங்கள் கல்லூரிக்கு வந்தார். நான் முன் வரிசையில் இடம் பிடித்து, சூர்யா... சூர்யா... என்று கூச்சல் போட்டு கலாட்டா செய்ததை பார்த்து என் தோழிகளே அசந்து போய் விட்டார்கள்.
நீங்கள் யாருடைய ரசிகையோ அவருடனே இப்போது ஜோடியாக நடிக்கிறீங்க. இதை எப்படி பார்க்கிறீங்க?
என் வாழ்க்கையில் எத்தனையோ அதிசயங்கள் நடந்திருக்கின்றன. நாளை என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாது. என்றாலும் நல்லது நடக்கும் என்று நினைத்தால் நிச்சயம் நடக்கும். இப்போது நான் சூர்யாவின் ஜோடியாக நடித்து விட்டேன். இது போன்ற அதிசயங்கள் எல்லோருக்கும் நடக்கும். கனவு நனவாகும் காலம் வரும்.
தமிழில் நீங்களே டப்பிங் பேசுறீர்களே எப்படி?
தமிழ் எனது சொந்த மொழி. அதனால், தமிழ் படங்களில் முதல் முறையாக எனது சொந்த குரலில் பேசி இருக்கிறேன். விரைவில் தெலுங்கு படங்களிலும் சொந்த குரலில் பேசுவேன்.
  

Comments