கூட்டணி அமைத்து மூன்று புதிய படங்களை துவங்கினார் சி.வி.குமார்!!!

5th of October 2014
சென்னை:தமிழ்சினிமாவை பொறுத்தவரை புதியவர்களை தேர்வு செய்து அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பளிப்பதாகட்டும், எட்டாக்கனியாக இருக்கும் கனவை எட்டிப்பிடிக்க அவர்களுக்கு கைகொடுத்து உதவுவதாகட்டும் அதில் முதல் இடத்தை பிடிப்பவர் தயாரிப்பாளர் சி.விகுமார் தான்.
 
பிட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, சரபம் உள்ளிட்ட பல வெற்றி படங்களையும் சித்தார்த் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் “எனக்குள் ஒருவன்” படத்தையும் தயாரித்துள்ள சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது மேலும் மூன்று புதிய படங்களுக்கு நேற்று பூஜை போட்டு கோலாகலமாக துவங்கியுள்ளது.

இதில் இரண்டு படங்களை தங்களது ‘ட்ரீம் பேக்டரி’ கூட்டணி அமைப்பில் உள்ள மற்ற இரு நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறது. ஒன்று ஸ்டுடியோ கீரின் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘இன்று நேற்று நாளை’.
 
இந்தப்படத்தை இயக்குனர் நலன் குமாரசாமியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ரவி இயக்குகிறார். விஷ்ணு மற்றும் கருணாகரன் நடிக்கும் இப்படத்திற்கான இசையை “ஹிப் ஹாப் தமிழா” புகழ் ஆதியும், படத்தொகுப்பை லியோ ஜான்பாலும் கவனித்து கொள்கின்றனர். ஒளிப்பதிவு வசந்த் (அறிமுகம்).
 
இரண்டாவது படத்தை அபி&அபி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, இதை ‘சூதுகவ்வும்’ புகழ் நலன் குமாரசாமி இயக்கவிருக்கிறார். சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் அத்தியாயமாக உருவாகும் இந்தப்படத்திற்கு ‘கை நீளம்’ என பெயரிடப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தினேஷ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, லியோ ஜான்பால் படத்தொகுப்பை கவனிக்கிறார். ரஜினி பிறந்தநாளில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.
பீட்சா, ஜிகர்தண்டா என தனது இரண்டு படங்களிலும் வித்தியாசமான கதைக்களங்களை கையாண்டு வெற்றி பெற்ற இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் மூன்றாம் படம் “இறைவி”. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கேவிமிக் ஏரி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது.

Comments