காதல் தோல்விகளை தாங்கிக்கொள்வது எப்படி? சிம்புவின் அனுபவ ஆலோசனை!!!

15th of August 2014
சென்னை:சிம்பு என்றாலே காதலும், தோல்வியும்தான் எல்லோருடைய மனசுக்குள்ளும் எட்டிப்பார்க்கும். ஆனால், அது தவறு என்று எண்ண வைக்கிற அளவுக்கு முற்றிலுமாக மாறிப்போய் இருக்கிறார், அவர். சில வருடங்களுக்கு முன்பு பார்த்த சிம்பு வேறு. இப்போது பார்க்கும் சிம்பு வேறு என்று கருதுகிற அளவுக்கு அவருடைய சுதந்திரதின மலர் பேட்டி அமைந்தது.

இது நம்ம ஆளு படத்தில் நீங்களும், நயன்தாராவும் இரண்டாவது முறையாக இணைந்து இருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது. அந்த அளவுக்கு எல்லோருக்கும் படமும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஒரு கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் காதல் இருப்பதாக செய்தி பரவினாலே அவர்கள் நடிக்கும் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு வந்து விடும். இது நம்ம ஆளு படத்துக்கு அந்த எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா என பிரபல கதாநாயகிகள் அத்தனை பேரும் உங்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்கள். அவர்களில், உங்களுக்கு பொருத்தமானவர்&உடன் நடிப்பதற்கு சவுகரியமானவர் என்று யாரை சொல்வீர்கள்?

விண்ணைத்தாண்டி வருவாயா படம் வந்தபோது, திரிஷாதான் பொருத்தமான ஜோடி என்று எல்லோரும் சொன்னார்கள். உடன் நடிப்பதற்கு சவுகரியமான கதாநாயகியும் அவர்தான். அவர் என்னுடைய சிறந்த சினேகிதி.
எம்.ஜி.ஆர்&சிவாஜி காலத்தில் ரசிகர்கள் மத்தியில் இருந்த போட்டியும், மோதல்களும் சிம்பு&தனுஷ் காலத்தில் குறைந்து இருக்கிறதா, அதிகரித்து இருக்கிறதா?

சுத்தமாக குறையவில்லை. அதிகமாகியிருக்கிறது. முன்பு ரசிகர்கள் மத்தியில் போட்டியும், மோதல்களும் எந்த அளவில் இருக்கிறது? என்று தெரியாது. என்ன நடக்கிறது? என்று புரியாது. இன்டர்நெட் வந்த பிறகு ரசிகர்களுக்கு இடையேயான மோதல்கள் வெளிப்படையாக தெரிகிறது. இந்த மோதல்கள் ஆரோக்கியமானது அல்ல.

எனக்கு ரஜினியையும், அஜீத்தையும் பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்காக விஜய்யை வெறுக்க வேண்டும் என்று நினைப்பது தவறான விஷயம். எம்.ஜி.ஆரை பிடிக்கும் என்றால், சிவாஜியை வெறுக்க வேண்டும் என்று நினைப்பது, அறிவின்மை. எந்த நடிகராக இருந்தாலும் அவர்களை ரசிகர்கள் தவறாக பேசக்கூடாது. உனக்கு பிடித்தால் கைதட்டு, விசில் அடி. பிடிக்கவில்லை என்றால் திட்டாதே.

தனுஷ், எனக்கு போட்டிதான். ஆனால் அவருடைய பிறந்தநாள், அவர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில்
 
நான் கலந்து கொள்கிறேன். அவர் சக நடிகர். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். அதற்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டும். ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு, இன்டர்நெட்டில் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வது, கேவலமான விஷயம்.

நயன்தாரா, ஹன்சிகா என அடுத்தடுத்து ஏற்பட்ட காதல் தோல்விகளை எப்படி தாங்கிக் கொண்டீர்கள், வலிக்கவில்லையா?

முதல்முறை கத்திக்குத்து வாங்கினால்தான் வலிக்கும். உயிர் போய்விடுமோ என்று பயமாக இருக்கும். ஏற்கனவே குத்து வாங்கியாச்சு. இரண்டாவதாக வாங்கியது புதுசு கிடையாது. பழசுதான். அதனால் பெருசா எடுத்துக் கொள்ளவில்லை. எதுவும் நம் கையில்கிடையாது. கடவுள்தான் டைரக்டர். நான், நடிகர்தான். எனக்கு காதலில் தோல்வி ஏற்பட வேண்டும் என்று தீர்மானிப்பது, கடவுள். அவர் என்ன தீர்மானிக்கிறாரோ, அது நடந்து விட்டுப் போகட்டும். அதில், ஒரு நல்ல விஷயம் கூட இருக்கலாம்.

உங்களுக்கு வீட்டில் பெண் பார்ப்பதாக பேசப்படுகிறதே, முடிவாகி விட்டதா?

எனக்கு பெண்ணை பிடித்தால்தான் திருமணம் செய்து கொள்வேன். கல்யாணம் என்பது உடனே பார்த்து உடனே முடிப்பது அல்ல. அது, பெரிய பிராசஸ். ஆன்மிக ரீதியாக எனக்குள் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. என்னை ஒரு நடிகனாக அங்கீகரித்து, ஒரு இடமும் கொடுத்த தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு இருக்கிறது.

எல்லோருக்கும் நாற்பதில் இருந்து நாற்பத்தைந்து வயதில் நடக்க வேண்டியது, எனக்கு 29 வயதிலேயே நடந்திருக்கிறது. அடுத்த முப்பது வருடங்களுக்கு நான் மக்களுக்காக உழைப்பேன். அதற்காக அரசியலுக்கு வரவேண்டும் என்று அர்த்தம் அல்ல. அரசியல் எனக்கு பிடிக்காது. தெரியாது. பணம் இருந்தால் போதும். மக்கள் சேவையை தொடங்கி விடலாம். நான், தொடங்கப் போகிறேன்.

Comments