கௌதம் கார்த்திக்குடன் நடித்தது டார்ச்சராக இருந்தது: ராகுல் ப்ரீத் சிங்!!!

1st of May 2014
சென்னை::தமிழ் சினிமாவுக்குத் கிடைத்திருக்கும் அழகான ஹீரோயின் ராகுல் ப்ரீத் சிங். 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா போட்டியில் ஐந்து பிரிவுகளில் வெற்றிபெற்ற இவர், ஆர்யாவின் தம்பி சத்தியா அறிமுகமான ‘புத்தகம்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இப்போது ‘என்னமோ ஏதோ’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களைக் கொள்ளை கொள்ள வந்திருக்கிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரைச் சந்தித்தோம்.
 
சினிமாவில் சுலபமாக நுழைய அழகிப் போட்டிகளில் கிடைக்கும் டைட்டில்கள் உதவுகிறது இல்லையா?
 
சினிமாவில் நுழைய உதவுகிறதோ இல் லையோ, மாடலிங் உலகில் வெற்றிபெற இது நிச்சயம் உதவுகிறது. நான் அழகிப் போட்டிகளில் டைட்டில்களை வென்றபிறகு உடனடியாக சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சில விளம்பரப்படங்களில் நடித்த பிறகுதான் சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.
 
மாடலிங், நடிப்பு தவிர வேறு எதிலெல்லாம் உங்களுக்கு ஆர்வம் அதிகம்?
 
கோல்ஃப். தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான கோல்ஃப் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால் மாடலிங் செய்வதற்காகக் கோல்ஃப் விளையாடுவதை விட வேண்டி வந்தது. இப்போது பிஸியான ஹீரோயின் ஆன பிறகு மைதானத்தின் பக்கம் போகவே முடியவில்லை. ஆனால் இணைந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டில் அம்மாவுடன் கோல்ஃப் விளையாடுவேன்.
 
என்னமோ ஏதோ’ படத்தில் நடித்த அனுபவம் எப்படி?
 
இந்தப் படம் முதலில் தெலுங்கில் ‘அத மொதலைந்தி’என்ற பெயரில் வெளியானது. அது எனக்கு மிகவும் பிடித்த படம், அந்தப்படத்தை முதலில் பார்த்தபோது அதில் நித்யா மேனன் நடித்திருந்த கேரக்டர் நமக்குக் கிடைத்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தேன். அதே வேடம் எனக்கு தமிழில் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த பாத்திரத்தில் நடிக்க ரவி தியாகராஜன் கேட்டதுமே யோசிக்காமல் ஓகே சொன்னேன்.
 
நித்யா மேனனை காப்பியடிக்காமல் நடிக்க வேண்டும் என்ற கவலை இருந்ததா?
 
ஆமாம், இயக்குநர் ஐந்து முறையாவது படத்தைப் பாருங்கள் என்றார். படத்தை ஒப்புக்கொள்ளும் முன்பே நான் இரண்டுமுறை பார்த்திருந்தேன். மீண்டும் மீண்டும் பார்த்தபோது எங்கே நித்யா போலவே நடித்து விடுவோமே என்ற பயம் இருந்தது. எனது எனர்ஜி லெவல் எனது நடிப்பில் இருக்கும்படி பார்த்துக் கொண் டேன். எனது உடல்மொழியைக் கவனமாக வெளிப்படுத்தினேன்.
 
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ’நீ என்ன பெரிய அப்பா டக்கரா?’ பாடல் வரியின் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?
 
கௌதம் கார்திக்குடன் நடிப்பது ரொம் பவே டார்ச்சராக இருந்தது. டார்ச்சர் என்றால் ரொம்பவும் லவ்லியான டார்ச்சர். அவர்தான் அப்பா டக்கருக்கு அர்த்தம் சொல்லிக்கொடுத் தார். பாங்காக்கில் இரண்டு பாடல்களைப் படமாக்கினோம். இரண்டுமே ரொமான்ஸ் பாடல் கள். ஆனால் படப்பிடிப்பில் கௌதமுக்கு ரொமான்சே வரவில்லை. ரொம்பவே கஷ்டப்பட்டார். என்னிடமிருந்து கொஞ்சம் ரொமான்ஸை கடன் வாங்கிக்கொண்டார் என்று சொல்ல வேண்டும்.
 
எல்லா மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்து விட்டீர்கள். எந்த மொழியில் நடிக்க பிடித்திருக்கிறது?
 
தமிழில் பேசுவதைக் கேட்கப் பிடிக்கிறது. அதன் உச்சரிப்பு இனிமையாக இருப்பதாக எண்ணுகிறேன். ஆனால் தெலுங்கில் மூன்று படங்களைக் கடந்துவிட்டதாலும் தற்போது மூன்று படங்களில் நடித்து வருவதாலும் எனக்குத் தெலுங்கு மொழியில் சுலபமாகப் பேச முடிகிறது. தெலுங்கு மொழியை நான் நன்றாகவே பிடித்துக் கொண்டுவிட்டேன்.
 
தமிழில் அடுத்து என்ன படத்தில் நடிக்கிறீர்கள்?
 
இன்னும் எந்தப்படத்தையும் ஒப்புக்கொள்ள வில்லை. நல்ல கேரக்டர் நல்ல டீம் அமைந்தால் கண்டிப்பாக ஓகே சொல்வேன்...
 

Comments