ரஜினிகாந்தின் எளிமையும், ஆர்வமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது: நடிகை தீபிகா படுகோனே நெகிழ்ச்சி!!!


16th of April 2014
சென்னை::ரஜினிகாந்தின் எளிமையும், ஆர்வமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்று கோச்சடையான் படத்தில் நடித்த இந்தி நடிகை தீபிகா படுகோனே தெரிவித்தார்...
கோச்சடையான்‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன், இந்தி நடிகை தீபிகா படுகோனே இணைந்து நடித்து உள்ள படம் ‘கோச்சடையான்’. இந்த படத்தை ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இயக்கி உள்ளார். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு உருவான இந்த படம் அடுத்த மாதம் (மே) திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், கோச்சடையான் படத்தின் இந்தி பதிப்பு டிரைலரை கடந்த வாரம் மும்பையில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டார். இதில் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொள்ளவில்லை.
பேட்டி
இந்த நிலையில், தீபிகா படுகோனே நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கோச்சடையான் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றிய தனது அனுபவம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது:–
கோச்சடையான் படப்பிடிப்பில் சக நடிகர்கள் இல்லாமல் நாங்கள் படப்பிடிப்பை நடத்தினோம். இதன் காரணமாக என்னால் ரஜினிகாந்துடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. இருப்பினும், எனக்கு அவருடன் பேச 1½ நாள் கிடைத்தது. அவருடன் இருந்த அந்த நேரத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். ரஜினிகாந்தின் எளிமையையும், பெருந்தன்மையையும் என்னுடன் எடுத்து சென்றேன். அதை தொடர்ந்து பின்பற்றியும் வருகிறேன்.
ரஜினிகாந்தை ரசிக்கிறேன்
படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் உற்சாகமாக இருப்பார். முழுசக்தியையும் ஒருங்கிணைத்து பணியாற்றுவார். எல்லாரையும் இன்முகத்தோடு வரவேற்பார். சவுந்தர்யாவை தனது மகள் என்று கருதாமல், இயக்குனராகவே பாவித்து அவர் சொன்னதை எல்லாம் கேட்டார். தொழிலில் அவருக்கு இருந்த ஈடுபாடு என்னை மிகவும் கவர்ந்தது.
நிறைய ஆண்டுகள் சினிமாவில் நடித்தபோதும் கூட சினிமா மீதான ரஜினிகாந்தின் ஈடுபாடும், ஆர்வமும் இன்னமும் கொஞ்சம் கூட குறையவில்லை. அவரது எளிமையும், ஆர்வமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் அவரை ரசிக்கிறேன். ரஜினிகாந்தும், அமிதாப் பச்சனும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை மிகவும் ஈடுபாட்டுடன் முடிப்பார்கள். அவர்களது கண்களில் ஆர்வத்தை காணலாம்.
சவாலான படம்
அதிநவீன தொழில்நுட்பம் மிக்க இந்த படத்தில் பணியாற்றுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. படப்பிடிப்பின்போது, எனது முகத்தின் வலது பக்கத்தில் கேமரா இருக்கும். நான் மாடிப்படிகளில் ஏற வேண்டும் எனில், மாடிப்படிகள் அங்கு இல்லை என்பதை முதலில் நான் உணர வேண்டும். மேலும், ஏதேனும் ஒன்றை தொட வேண்டும் என்றால், அது எந்த மாதிரியானது என்பதை உணர வேண்டும். இது எனக்கு மிகவும் சவாலாக விளங்கியது. படத்தில் இளவரசியாக நடித்து உள்ளேன். இந்த படம் எனது கற்பனைத்திறனை முழுவதுமாக பயன்படுத்த தூண்டியது.
மும்பையில் கோச்சடையான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி. அப்போது நான் ‘ஹேப்பி நியூ இயர்’ படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ள இயலவில்லை.
இவ்வாறு நடிகை தீபிகா படுகோனே தெரிவித்தார்....

Comments