பெப்ஸி நடத்திய பேரணி : இளையராஜா தொடங்கி வைத்தார்!!!


6th of November 2013
சென்னை::ஜெயலலிதாவை பெப்சி தொழிலாளர்கள் சந்தித்து மனு கொடுத்தனர். தென் இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வற்புறுத்தி நேற்று சென்னையில் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
அதன்படி நேற்று காலை 8 மணியில் இருந்தே சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் சினிமா தொழிலாளர்கள் வந்து குவியத் தொடங்கினார்கள். காலை 10 மணி அளவில் ஊர்வலம் புறப்பட்டது. தென் இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன (பெப்சி) தலைவர் அமீர் ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார்.
 
பெப்சி செயலாளர் சிவா, இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு மற்றும் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
 
திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜா, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள 'பெப்சி'யின் கொடியை காட்டி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பேரணி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து புறப்பட்டு புதுப்பேட்டை வந்தது. அங்கிருந்து கூவம் கரையோர சாலை வழியாக சிந்தாதிரிபேட்டை சென்ற டைந்தது. இதில் தமிழக திரைப்பட தொழிலாளர்கள், ஸ்டண்ட்யூனியன், நடன கலைஞர்கள், எடிட்டர்கள், இசை அமைப்பாளர் சங்கத் தினர் உள்ளிட்ட 23 சினிமா சங்கத்தினர் பங்கேற்றனர்.
 
ஊர்வலத்தில் படப்பிடிப்பு கேமராக்கள், படப்பிடிப்புக்கு தேவையான மின்விளக்குகள் மற்றும் கருவிகளுடன் வாகனங்கள் இடம் பெற்றன. நடன கலைஞர்கள் நடனம் ஆடிக்கொண்டு வந்தனர். ஸ்டண்ட் யூனியன் ஊழியர்கள் சாகசங்களை நிகழ்த்தி காட்டினார்கள். குதிரைகளிலும் தொழிலாளர்கள் வந்தனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் வேலை பாதுகாப்பு, சம்பள உயர்வு, வீடுகட்ட கடன், படப்பிடிப்பு சலுகைகள் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் அடங் கிய அட்டைகளை ஏந்தி சென்றனர்.
 
கோரிக்கைக்கு ஆதரவாக முழக்கங்களையும் எழுப்பிச் சென்றனர். வழி நெடுக முதல்_ அமைச்சர் ஜெயலலிதாவின் பேனர், கட்_ அவுட் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. 'பெப்சி' கொடிகளும் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. பகல் 11.45 மணிக்கு பேரணி புதுப்பேட்டை பாலம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடை அருகே வந்து சேர்ந்தது. 'பெப்சி' தலைவர் அமீர், டைக்டர்கள் வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் பேசினார்கள். 
ஊர்வலத்திற்கு பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை பெப்சி தலைவர் அமீர் தலைமையில் இயக்குனர் விக்ரமன், சங்க செயலாளர் சிவா உட்பட 9 பேர் சந்தித்து பேசினார்கள்.
 
சந்திப்புக்கு பின்னர் இயக்குனர் அமீர் கூறுகையில், நாங்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து எங்கள் கோரிக்கைகலை மனுவாக கொடுத்தோம். இதை படித்து பார்த்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்து உள்ளார் என்றார்.
 
முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்த கோரிக்கைகள் வருமாறு:_
 
கடந்த மூன்று ஆண்டுகளாக முடிக்கப்படாத நிலையில் உள்ள சினிமா தொழிலாளர்கள் மற்றும் சின்னத்திரை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை விரைந்து முடித்து எங்களது 24000 தொழிலாளவ்களின் நிலையை மேம்படுத்த கோரியும்.
 
திருட்டு விசிடி மீண்டும் தலை தூக்குவதை தடுத்து நிறுத்தக் கோரியும்.
மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக முதல் முறையாக திரைப்பட துறைக்கு வீடுகட்ட தங்களது அரசு நிலம் வழங்கியும் சில இடர்பாடுகளால் வீடு கட்ட முடியாமல் இருக்கும் நிலையை மாற்ற கோரியும்.
 
சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள சங்கங்களின் உறுப்பினர்களுக்காக ஏற்படுத்திய கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் தேர்தலை முறையற்ற முறையில் நடத்திய தேர்தல் அதிகாரி மற்றும் அதற்கு உதவிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்.
 
தவறான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தலைவராக உள்ள செந்தில், வி.சி.குகநாதன் உள்ளிட்ட குழுவை முழுவதுமாக கலைத்து மீண்டும் முறையாக தேர்தலை நடத்த கோரியும்.
உள்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments