முருகதாஸ் அழைப்பு : சந்தோஷ் சிவன் மறுப்பு!!!

Wednesday,21st of November 2012
சென்னை::துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக்கில் பணியாற்ற மறுத்துள்ளார் சந்தோஷ் சிவன். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் துப்பாக்கி. இதில் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன், ஒளிப்பதிவு செய்திருந்தார். இதே படம் இந்தியில் முருகதாஸ் இயக்கத்திலே உருவாகிறது. அக்ஷய் குமார், பரினிதி சோப்ரா நடிக்கின்றனர். இந்தியிலும் நீங்களே ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என சந்தோஷ் சிவனை முருகதாஸ் கேட்டாராம். அக்ஷய் குமாரும் சந்தோஷ் சிவனை படத்தில் பணியாற்ற அழைப்பு விடுத்தார். ஆனால் இதை ஏற்க மறுத்துள்ளார் சந்தோஷ் சிவன். இது பற்றி அவர் கூறியதாவது: துப்பாக்கி போன்ற பக்கா கமர்ஷியல் படத்தில் பணியாற்றியதை எல்லோரும் ஆச்சரிமாய் பார்க்கிறார்கள்.

இதில் ஆச்சரி யப்பட ஒன்றுமில்லை. மணிரத்னத்தின் தளபதி படத்தில் பணியாற்றினேன். அதில் ரஜினி நடித்தார். அதுவும் பக்கா கமர்ஷியல் படம்தான். ஒரு கலைஞன் எல்லா பாணியிலான படத்திலும் பணியாற்ற வேண்டும். கமர்ஷியல் சினிமாவுக்கு நான் எதிரி கிடையாது. அதே நேரம் இந்தி துப்பாக்கியில் பணியாற்ற நான் மறுத்திருக்கிறேன். இந்தியிலும் நான் பணியாற்ற வேண்டும் என முருகதாஸ், அக்ஷய் குமார் விரும்பினர். ஆனால் ரீமேக்கில் பணியாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. இப்போதைக்கு ஒளிப்பதிவு செய்ய நிறைய வாய்ப்புகள் வருகிறது. ஆனால் ஒளிப்பதிவிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கப்போகிறேன். அடுத்து, எனக்கு பிடித்த கதை ஒன்றை படமாக்க உள்ளேன். அது பற்றி பின்னர் அறிவிப்பேன். இவ்வாறு சந்தோஷ் சிவன் கூறினார்.

Comments