யார் தாக்கினாலும் கவலை இல்லை: திவ்யா பதிலடி!

Monday,15th of October 2012
சென்னை::யார் தாக்கினாலும் கவலை இல்லை என் தகுதிக்கு ஏற்ற சம்பளம்தான் வாங்குகிறேன் என்றார் திவ்யா. வாரணம் ஆயிரம், குத்து, கிரி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் திவ்யா. கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் இவரைப்பற்றி தொலைக்காட்சியில் பேட்டி அளித்த கன்னட நடிகை ராகினி கடுமையாக தாக்கினார். முன்னணி நடிகை என்ற பெயரில் திவ்யா அதிக சம்பளம் வாங்குவதாக குற்றம் சாட்டி இருந்தார். தொடர்ந்து பேட்டி கண்டவர் ராகினியிடம் திவ்யாவை பற்றியே கேள்வி கேட்டதால் கோபம் அடைந்தார். ‘திரும்ப திரும்ப திவ்யாவை பற்றியே கேள்வி கேட்பது ஏன்? மற்றொரு நடிகையை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று ராகினி கடிந்துகொண்டார். ராகினியின் பேட்டி கன்னட படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பதில் அளிக்காமல் மவுனம் காத்து வந்தார் திவ்யா. தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். ‘முன்னணி இடத்தில் நான் இருப்பது பற்றி ஒரு சிலர் தவறாக விமர்சிக்கிறார்கள். அவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு நல்லவிதமான கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. அதை மகிழ்ச்சியாக ஏற்கிறேன். எனது தகுதிக்கு ஏற்பத்தான் சம்பளம் பெறுகிறேன் என்று ராகினிக்கு பதிலடி கொடுத்தார். இதுபற்றி பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள ராகினி, ‘ஒரு சிலர் தங்களிடம் அதிக சக்தி இருப்பதாக எண்ணி அதை தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் செய்வதை செய்யட்டும். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் எதையும் நிர்ணயிப்பது கடின உழைப்பும், ஆண்டவனும்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments