மணிரத்னத்தின் கடல் படத்திலிருந்து வெளியேறினார் சமந்தா!! - ஏன்? என்னாச்சு? எப்படி?!!!

Saturday, 9th of June 2012
கோடம்பாக்கமே ஆச்சர்யத்துடன் பேசிக்கொள்ளும் விஷயம்... மணிரத்னத்தின் கடல் படத்திலிருந்து ஹீரோயின் சமந்தா வெளியேறிவிட்டதுதான்!

ஏன்? என்னாச்சு? எப்படி?

என ஒவ்வொருவரும் மணிரத்னம் ஸ்டைலிலேயே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

கார்த்திக் மகன் கவுதம் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தென் தமிழகத்தின் கடற்கரையோர கிராமங்களில் தீவிரமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

மணிரத்னத்தைப் பொருத்தவரை இந்தப் படம் அவருக்கு பெரிய சவால். காரணம், தொடர்ந்து அவரது படங்கள் பாக்ஸ் ஆபீசிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அவரது சமீபத்திய வெளியீடான ராவண், தமிழ், தெலுங்கு, இந்தி மூன்றிலுமே படுதோல்வி கண்டது.

எனவே பார்த்துப் பார்த்து கடல் படத்தை உருவாக்கி வருகிறார்.

சமந்தா இந்தப் படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டதும், தனது வாழ்க்கையில் இந்தப் படம் மறக்கமுடியாததாக அமையும் என்று சந்தோஷப்பட்டார்.

ஆனால் இப்போது திடீரென்று படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சமந்தா அறிவித்துள்ளார். கவனிக்க... மணிரத்னம் நீக்கவில்லை... சமந்தாவே விலகிக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

தமிழில் இனிமேல்தான் சமந்தாவுக்கு வெற்றிப் படம் அமைய வேண்டும். இந்த சூழலில் பெரிய வாய்ப்பு ஒன்றிலிருந்து தானாகவே விலகிக் கொண்டிருக்கிறாரே... என்னவாக இருக்கும்? என்று பேச ஆரம்பித்துள்ளது கோடம்பாக்கம்...

இப்போதைக்கு, நீதானே என் பொன்வசந்தம், ஷங்கர் படம் மற்றும் கார்த்தியுடன் பிரியாணி ஆகியவை சமந்தாவின் கைவசம் உள்ளன.

Comments