சண்டை காட்சிகளில் நடிக்க விரும்பும் தேவயானி!!!

Monday, 18th of June 2012
சென்னை::ஜோயாலுக்காஸ் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு விழாவிற்காக நடிகை தேவயானி அவரது கணவர் டைரக்டர் ராஜகுமாரன் ஆகியோர் இன்று நெல்லை வந்தனர்.


நெல்லை ஹலோ எப்.எம்.ல் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது நடிகை தேவயானி கூறியதாவது:-


தற்போது முத்தாரம் டி.வி. தொடரில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்து வருகிறேன். போலீஸ் சீருடை அணிந்ததுமே ஒரு கம்பீரமும், மிடுக்கும் வருகிறது. நானே எதிர்பாராத அளவுக்கு அந்த கேரக்டரில் மிக இயல்பாக நடித்து வருகிறேன்.

தற்போது சின்னத்திரையிலேயே முழு கவனம் செலுத்தி வருகிறேன். கதைக்கு ஏற்ற கேரக்டர்கள் அங்கு கிடைக்கின்றன. போலீஸ் கேரக்டரில் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது. சண்டை காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். எனக்கு இனியா, பிரியங்கா என இரு குழந்தைகள் உள்ளனர். இனியா 2-ம் வகுப்பு படிக்கிறாள். பிரியங்கா யூ.கே.ஜி. படிக்கிறாள். குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பதற்காகவே அவுட்டோர் சூட்டிங்கில் அதிகமாக நான் பங்கேற்பதில்லை.

பல ஹீரோக்களுடன் நடித்தாலும் ரஜினியுடன் இதுவரை நடிக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் அவருடன் இணைந்து நடிப்பேன். தற்போது எனது கணவர் இயக்கியுள்ள திருமதி தமிழ் படத்தில் நடித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

டைரக்டர் ராஜகுமாரன் கூறியதாவது:-

நான் இதுவரை 4 படங்கள் இயக்கியுள்ளேன். 4-வது படமான திருமதி தமிழ் விரைவில் ரிலீசாக உள்ளது. 80 வருட தமிழ் சினிமா வரலாற்றில் யாரும் செய்யாத முயற்சியாக ஒவ்வொரு படத்திலும் புதுப்புது கவிஞர்களை அறிமுகப்படுத்தி வருகிறேன்.

இதுவரை 10க்கும் மேற்பட்ட கவிஞர்கள் அறிமுகமாகி உள்ளார்கள். திருமதி தமிழ் படத்திலும் புதிய கவிஞர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். தேவயானியிடம் யாரும் எதிர்பாராத நடிப்பு திறமைகள் உள்ளன. ஒவ்வொரு படத்திலும், டி.வி. தொடர்களிலும் இதை உணர்ந்துள்ளேன்.

திருமதி தமிழ் படத்தில் அவர் 19 வயது பள்ளி மாணவியாக நடிக்கிறார். நாகர்கோவில் பகுதியில் இந்த சூட்டிங் நடந்தபோது அதை பார்க்க வந்தவர்கள் இது தேவயானியின் தங்கையா என கேட்டார்கள். இந்த படத்தில் தேவயானியின் நடிப்பு எல்லோரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இதிலும் நிறைய திறமைகளை வெளிகாட்டியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments