இலங்கை வீரர் தில்ஷனுடன் டேட்டிங் போனேன்-நடிகை நூபுர் மேத்தா!!!

Saturday, March 24, 2012
சமீபத்தில்தான் மேட்ச்பிக்ஸிங் புகாரில் சிக்கி, அதை திட்டவட்டமாக மறுத்துப் பேசிய இந்தி நடிகை நூபுர் மேத்தா, தான் இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்ஷனுடன் டேட்டிங் போனதாக பகிரங்கமாக கூறியுள்ளார். இதனால் நூபுருக்கும், மேட்ச்பிக்ஸிங் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த தி சண்டே டைம்ஸ் இதழ் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவைச் சேர்ந்த சூதாட்ட புக்கிகள், கவுண்டி கிரிக்கெட் போட்டிகளையும், பல்வேறு சர்வதேச போட்டிகளையும் கட்டுப்படுத்தி வருகிறார்கள். போட்டி முடிவுகளை இவர்களே நிர்ணயிக்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியிலும் சூதாட்டம் நடந்துள்ளது என்று கூறியிருந்தது.

மேலும், சில இந்தி நடிகைகளை வைத்து பல கிரிக்கெட் வீரர்களை செக்ஸ் ஆசை காட்டி வலையில் வீழ்த்தி வருவதாகவும் அந்த இதழ் கூறியிருந்தது. இந்த செய்தியில், நடிகை நூபுர் மேத்தாவின் முகத்தை மட்டும் லைட்டாக மறைத்து விட்டு அவர் மல்லாந்து கிடப்பது போன்ற அரை நிர்வாணப் படத்தையும் சண்டே டைம்ஸ் போட்டிருந்தது.

ஆனால் இந்த செய்தியுடன் தனது படத்தை இணைத்துப் போட்டதை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தினார் நூபுர். எனக்கு கிரிக்கெட்டே தெரியாது. நான் எந்த கிரிக்கெட் வீரரையும் சந்தித்தில்லை, போட்டியைக் கூட பார்த்ததில்லை. எனது படத்தை எனது அனுமதி பெறாமல் போட்ட பத்திரிக்கை மீது வழக்குத் தொடரப் போகிறேன் என்று ஆவேசமாக குரல் கொடுத்திருந்தார்.

ஆனால் தற்போது தடாலடியாக ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கும் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பது உண்மைதான் என்றும், லண்டனில் கிரிக்கெட் வீரர்கள் சிலரை சந்தித்ததாகவும், இலங்கை வீரர் தில்ஷனுடன் தான் டேட்டிங் செய்ததாகவும் நூபுர் ஒத்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின்போது காசினோ ஒன்றில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சிலரைச் சந்தித்தேன். ஆனால் எனக்கும் கிரிக்கெட் சூதாட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன்.

அப்போது தில்ஷனுடன் நான் டேட்டிங் செய்து வந்தேன். அவருடன் சேர்ந்துதான் கேசினோவுக்குப் போனேன். ஆனால் அதை வைத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் எனக்குத் தொடர்பு இருப்பதாக கூற முடியாது.

தில்ஷனுடன் நான் போனது எனது தனிப்பட்ட விஷயம், தனிப்பட்ட உறவு தொடர்புடையது. அதை கிரிக்கெட் சூதாட்டத்துடன் இணைத்துப் பார்க்கக் கூடாது. நான் தனிமையில் வசிக்கும் பெண், அழகான பெண். உலகின் எந்த மூலைக்கும் சுதந்திரமாக போய் வரக் கூடிய சுதந்திரம் எனக்கு உள்ளது. யாருடனும் நான் பழக முடியும். பேச முடியும். எனக்குப் பிடித்ததை நான் செய்ய எனக்கு சுதந்திரம் உள்ளது என்று கூறியுள்ளார் நூபுர்.

நூபுர் டேட்டிங் போனதாக கூறப்படும் தில்ஷன் மீது ஏற்கனவே சூதாட்டப் புகார் இருப்பது நினைவிருக்கலாம்.

Comments